சசிகலாவுக்கு 35 வருடங்களாக நிம்மதியே இல்லை.. நடராஜன் படத்திறப்பு விழாவில் திவாகரன் கவலை
சசிகலாவுக்கு 35 வருடங்களாக நிம்மதியே இல்லை என அவரது சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தஞ்சை: சசிகலாவுக்கு 35 வருடங்களாக நிம்மதியே இல்லை என அவரது சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் கணவரும், புதியபார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராஜன் கடந்த 20-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். ம.நடராஜனின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி இன்று காலை தஞ்சையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தொடக்க உரை ஆற்றினார்.
நடராஜன் படத்திறப்பு
இந்திய பொதுவுடமைக் கட்சி கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு ம.நடராஜனின் உருவப் படத்தை திறந்து வைத்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.நடராஜன் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகத்தை வெளியிட அதனை சசிகலாவின் சகோதரரான திவாகரன் பெற்றுக் கொண்டார்.
நடராஜனுக்கு பயந்தேன்
இதைத்தொடர்ந்து பேசிய திவாகரன், நடராஜன் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தனது தந்தைக்கு தான் எவ்வளவு பயந்தேனோ அதுபோன்று தான் அத்தான் நடராஜனுக்கும் பயந்தேன் என அவர் கூறினார்.
மறைக்கப்பட்ட வரலாறு
நடராஜன் ஒரு மறைக்கப்பட்ட வரலாறு என்றும் திவாகரன் தெரிவித்தார். நடராஜனின் உடலை முள்ளி வாய்க்கால் முற்றத்தில் அடக்கம் செய்யலாம் என திட்டமிட்டு பின்னர் அதற்கு எதிரே உள்ள இடத்தில் அடக்கம் செய்ததாகவும் அவர் கூறினார்.
அற்புதமான வாழ்க்கை
இன்று அவரது சமாதியில் 50 பேர் மொட்டை போட்டு கொண்டதாக கூறிய திவாகரன், இதை பார்த்த பின்பு தான் நடராஜன் அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்து மறைந்தார் என்பது தெரிகிறது என்றும் திவாகரன் தெரிவித்தார்.
நிம்மதியே இல்லை
தனது சகோதரி சசிகலா துன்பத்திற்கு மேல் துன்பம் அடைந்து வருகிறார் என்றும் திவாகரன் தெரிவித்தார். 35 வருடமாக அவருக்கு நிம்மதியே இல்லை என்றும் இப்போதும் அதுதான் தொடர்ந்து வருகிறது என்றும் திவாகரன் கவலையுடன் பேசினார்.