மாட்டிறைச்சி தடை.. மாநில உரிமையில் தலையிட மத்திய அரசுக்கு உரிமையில்லை.. கேரள முதல்வர் அதிரடி
மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உரிமையில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
சென்னை: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திராவிட நாடு என்ற கோஷம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், மாட்டுக்கறி தடை விதிக்க மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்றும் அது மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் பினராயி விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதிகாரம் இல்லை
மாடு விற்பனையை ஒழுங்குபடுத்தக் கூடிய அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை. அதே போன்று இறைச்சிக்காக மாடு வெட்டுவதை முறைப்படுத்தும் அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கு இல்லை.
சட்டப்படி சரி
மத்திய அரசின் ஒழுங்குபடுத்தும் விதிகள் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். உணவிற்காக கால்நடைகளை வெட்டுவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டது.
உரிமை இல்லை
மத்திய அரசின் உத்தரவு மிருகவதை தடை சட்டத்திற்கு எதிரானது. மேலும், மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடுகிறது. அதற்கு பாஜகவிற்கு உரிமை இல்லை என்றும் பினராயி விஜயன் கூறினார்.
சிறப்பு சட்டசபை கூட்டம்
மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க சிறப்பு சட்டசபைக் கூட்டப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்த விவாதத்தின் போது முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.