தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி
பெரம்பலூர்: தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் பெரம்பலூரில் இன்று அதன் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. அங்கு வரவழைக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் போதிய வசதி செய்து தரப்படாமல் தரையில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் ஒருவழியாக நாற்காலிகள் கொடுக்கப்பட்டன.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் பெரம்பலூரியில் புதிய பஸ் நிலையம் அருகே இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கியிருந்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல், கூட்டணி, தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் போன்றவை குறித்து இந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டம் பற்றி பத்திரிகையாளர்களுக்கு முறைப்படி அக்கட்சி அறிவிப்பு செய்து அழைப்புவிடுத்திருந்தது.
ஆனால், செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. கூட்டம் நடைபெறும் பகுதிக்கு வெளியே, ஒரு தரைவிரிப்பை போட்டு கீழே அமருமாறு கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர். பொதுவாக கட்சிகளின் கூட்டத்திற்கு செல்லும் நிருபர்களுக்கு, ஒரு அறை ஒதுக்கி, சேர், பெஞ்ச், லேப்டாப், செல்போன்களை சார்ஜ் செய்யும் வசதிகள் செய்து தரப்படும்.
ஆனால், தேமுதிக கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களுக்கு இருப்பதற்கு கூட எந்த வசதியும் செய்து தரப்படாமல் இருப்பதற்காக பத்திரிகையாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதன்பிறகு நாற்காலிகள் கொடுக்கப்பட்டன. இருப்பினும், வேறு எந்த அடிப்படை வசதியும் அங்கு கிடையாது. வெயில் சுற்றிலும் திறந்திருந்த வீதி போன்ற பகுதியில் தலைக்கு மேல் துணியால் ஆனபந்தல் மட்டுமே போடப்பட்டிருந்தது.