'சீஸ்மெட்டிக் தொழில்நுட்ப' உதவியுடன் மாயமான விமானத்தை தேடும் பணி மும்முரம்!!
சென்னை: சிதம்பரம் கடல் பகுதியில் மாயமான விமானத்தை 'சீஸ்மெட்டிக் தொழில்நுட்ப' நவீன உதவியுடன் தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் இருந்து கடந்த 8-ந்தேதி புறப்பட்டுச் சென்ற இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ‘டோர்னியர்' விமானம் 3 பேருடன் மாயமானது. இதனை இயக்கிய விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி மற்றும் கடலோர காவல் படை அதிகாரி சுபாஷ் சுரேஷ் ஆகியோர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
விமானம் மாயமாகி 20 நாட்கள் ஆகிறது. மாயமான விமானம் சிதம்பரம் நகரத்தின் கிழக்கே 16 கடல் மைல் தூரத்தில் தான் விழுந்திருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்படி அந்தப் பகுதியில் 12 இந்திய கடலோர பாதுகாப்புப்படை கப்பல்களும், இந்திய கப்பல் படையின் 6 கப்பல்கள் மற்றும் விமானங்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மாயமான விமானிகளின் குடும்பத்தினரும் பிச்சாவரம் பகுதியில் சென்று தேடுதல் வேட்டையை பார்த்து வந்தனர். இந்தநிலையில் இன்று முதல் சீஸ்மெட்டிக் எனும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாயமான விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
நவீன வசதிகள் கொண்ட சாகர்நிதி மற்றும் ஒலிம்பிக் கேன்யான் கப்பல்களால் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அந்த கப்பல்கள் தேடும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது. சோனா சிஸ்டம் என்ற நவீன கருவிகள் மூலம் ஒளியை கடலில் பாய்ச்சி மாயமான விமானத்தில் இருந்து தகவல்கள் வருகிறதா? என்பது குறித்து பார்க்கப்பட்டது.
ஆனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் தற்போது அதிநவீன தொழில்நுட்பமான சீஸ் மெட்டிக் என்று அழைக்கப்படும் நவீன தொழில்நுட்ப திட்டம் மூலம் சிக்னல் விட்டுவிட்டு வரும் பகுதிகளில் நவீன கருவிகள் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது.