ஸிலிப்பர் செல்களா? எங்கள் அணியிலா? இல்லவே இல்லை: அடித்து சொல்லும் அமைச்சர்
தங்கள் அணியில் ஸிலிப்பர் செல்கள் யாரும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி: தங்கள் அணியில் ஸிலிப்பர் செல்கள் யாரும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தினகரனை நம்பி சென்றவர்கள் தற்போது பதவியை இழந்திருப்பதுதான் மிச்சம் என்றார்.
யாராக இருந்தாலும்
கட்சியின் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் கொறடா உத்தரவிட்டால் அவர்கள் பதவி விலக நேரிடும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரித்தார். சட்டசபை மரபுபடி 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளதாக கூறிய அவர் சபாநாயகரின் நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை என்றார்.
ஸ்டாலினுக்கு தகுதியில்லை
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து கருத்து கூற ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் அவர் கூறினார். தினகரன் அணிக்கு சென்ற 18 எம்.எல்.ஏ.க்களை தவிர அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒற்றுமையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஸிலிப்பர் செல்கள் இல்லை
தங்கள் அணியில் டிடிவி தினகரன் கூறுவது போல் ஸிலிப்பர் செல்கள் யாரும் இல்லை என்றும் அவர் கூறினார். சென்னையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், பொதுக்குழு கூட்டம் என அனைத்திலும் அவர்கள் கலந்து கொண்டனர் என்றும் கடம்பூ ராஜு தெரிவித்தார்.
ஆட்சி தொடர வேண்டும்
ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்பதே தங்களின் ஒரே நோக்கம் என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அதை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் என்றும் எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு நம்பிக்கை தெரிவித்தார்.