திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழா: இன்று ஆழ்வார் திருமஞ்சனம்- 5 மணிநேரம் தரிசனம் ரத்து
சென்னை: திருமலையில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதால் 5 மணி நேரம் சுவாமி தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருமலையில் வரும் 21, 22 ம் தேதிகளில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தேவஸ்தானம் கோயில் முழுவதையும் சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதற்காக காலை 6 மணிமுதல் காலை 11 மணிவரை, ஏழுமலையான் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. பிற்பகல் 12 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்பசிவராவ், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு தங்கும் அறைகள், தரிசன வரிசைகளில் உணவு பொட்டலங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு வழங்குவதற்கு ஒரு லட்சம் மோர் பாக்கெட், 2 லட்சம் குடிநீர் பாக்கெட்டுகளும் வழங்கப்படும். வைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலை முழுவதும் தூய்மையாக வைத்திருக்க துப்புரவு ஊழியர்களும், பக்தர்களும் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அனைத்துத் துறைகளில் உள்ள ஊழியர்கள் சிறப்பாக செயல்படுகிறார்களா? என்பதை அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும். பக்தர்களுக்கு சேவை செய்யும் பணியில் கூடுதலாக ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள், சாரண, சாரணியர்களை நியமித்து கொள்ளலாம். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, பலத்த பாதுகாப்புப்பணியில் ஊழியர்களையும், போலீசாரையும் கூடுதலாக நியமிக்க வேண்டும். லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால், அவர்களுக்கு விரைவில் தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.
2 நாட்களுக்கு தங்கும் அறைகள் முன்பதிவு செய்தவர்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. நேரடியாக வரும் பக்தர்களுக்கு அறைகளை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கோவிந்த மாலை அணிந்து வரும் பக்தர்களுக்கு தனி தரிசன வரிசைகள் கிடையாது. வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் வழியாக சென்று பக்தர்களோடு பக்தர்களாக சென்று சாமி தரிசனம் செய்யலாம். வைகுண்ட ஏகாதசி, துவாதசி அன்று வைகுண்ட கியூ காம்ப்ளக்சில் உள்ள சுபதம் வழியாக சில முக்கிய பக்தர்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. வைகுண்ட ஏகாதசி, துவாதசி அன்று 2 நாட்களுக்கு அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக நடந்து வரும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி சீட்டு வழங்குவது ரத்து செய்யப்பட்டு உள்ளது.
அவர்கள் வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் வழியாக சென்று பக்தர்களோடு பக்தர்களாக சென்று சாமி தரிசனம் செய்யலாம். மேலும் முதியோர், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 2 நாட்களுக்கு தரிசன அனுமதி கிடையாது. திருமலையில் தற்போது 12 இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன. இன்னும் கூடுதலாக 4 அரசு பஸ்களை திருமலையில் இலவசமாக இயக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் சாம்பசிவராவ் கூறியுள்ளார்.