'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.., எங்கள் நிலவில் என்றுமில்லை தேய்பிறை.., சொல்கிறார் குஷ்பு
சென்னை: காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இல்லை என்றும், ஒரே அணியாகத்தான் அனைவரும் செயல்படுகிறோம் என்றும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். இந்த நிலையில் சமீபத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் கட்சியில் இருந்து விலகினார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், கார்த்தி சிதம்பரத்துக்கும் இடையே நீருபூத்த நெருப்பாக மோதல் நிலவி வருகிறது.
செயற்குழு கூட்டம்
இந்த மோசமான நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் முன்னிலை வகித்தார்.
குஷ்பு, கார்த்தி சிதம்பரம்
இந்த கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன், துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், விஜயதரணி எம்.எல்.ஏ., நடிகை குஷ்பு, கார்த்தி ப.சிதம்பரம் உள்பட செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இளங்கோவன்தான் பாஸ்
கூட்டத்துக்கு பிறகு குஷ்பு கூறியதாவது: டெல்லி சட்டசபை தேர்தலில் 5 தொகுதிகளில் பிரசாரம் செய்தேன். பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லை. மீடியாக்கள் தான் தனித்தனி கோஷ்டிகளாக பிரித்து பார்க்கிறது. எல்லோரும் காங்கிரசுக்காக ஒரு அணியில் இருந்து பாடுபடுகிறோம். காங்கிரசை பொறுத்தமட்டில் ஒரே அணிதான். அது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் செயல்படுகிறது என்றார்.
பணநாயகம்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறுகையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணநாயகம் நடைபெறுகிறது. வாக்குக்கு பணம் கொடுப்பவர்களுக்கும், பணத்தை வாங்குபவர்களுக்கும் தண்டனை என்ற சட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நாளைக்கே அமல்படுத்தினாலும் வரவேற்கத்தக்கது" என்றார்.
கூட்டத்தை நடத்தி குதுகலப்படுத்துங்கப்பா..
கார்த்தி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறும்போது, "முதல் முறையாக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதுபோன்று கூட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கது. அடிக்கடி கூட்டம் நடத்தப்பட வேண்டும்" என்றார்.