ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்காத நடிகர்களுக்கு காசு திரட்ட மட்டும் "காளை" வேண்டுமா??
சென்னை: ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டு 2 வருடங்களாகிறது. 2 வருடமாக ஜல்லிக்கட்டை நடத்த முடியாமல் தென் மாவட்டங்கள் வேதனையில் புழுங்கிப் போயிருந்தன. தங்களுக்குக் குரல் கொடுக்கக் கூட ஆள் பலம் இல்லாமல் தவித்துப் போயிருந்தன. அப்படி நடந்தபோதெல்லாம் வாயை மூடிக் கொண்டு வேடிக்கை பார்த்த நடிகர்கள் இப்போது "மதுரை காளைஸ்" என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கியுள்ளனர்.. சங்கக் கட்டடம் கட்ட மக்களிடமிருந்து காசு வாங்க!
நடிகர் சங்கம் நடிகர்கள், நடிகைகள் தொடர்பானது. இவர்களின் சங்கத்திற்குள் இவர்களைத் தவிர வேறு யாரையும் உள்ளே நுழையக் கூட விட மாட்டார்கள். அப்படி இருக்கையில் இந்த சங்கத்தின் கட்டடத்தைக் கட்ட காசுக்கு மட்டும் மக்களிடமே இவர்கள் வருவதற்கான காரணம்தான் தெரியவில்லை.
நாம் வீடு கட்டுவதாக இருந்தால் நாம்தானே அதற்கான செலவைப் பார்த்துக் கொள்ள வேண்டும். மாறாக வீடு வீடாகப் போய் காசு கேட்டால் யாராவது தருவார்களா.. ஆனால் நடிகர்கள் மட்டும் எப்போதுமே மக்களின் காசையே தொடர்ந்து வசூலிக்க துடிப்பது ஏன் என்றுதான் புரியவில்லை.
மக்களிடமிருந்து பணம் வசூலிக்க அவர்கள் எடுத்திருக்கும் "உண்டியல்"களில் ஒன்றுதான் கிரிக்கெட் போட்டி.
விலங்குகளின் பெயர்களில் அணிகள்
காளை, சிங்கம், சீட்டா, டைகர், டிராகன், ரைனோஸ் என விலங்குகள் மற்றும் வாரியர்ஸ், கிங்ஸ் என தங்களது அணிகளுக்குப் பெயர் சூட்டியுள்ளனர் நடிகர் நடிகைகள். இதில் நமக்கு கண்ணில் உறுத்தலாக படுவது "மதுரை காளைஸ்" என்ற பெயர்தான்.
ஜல்லிக்கட்டுக்கு உதவாத நடிகர்கள்
காளையும், மதுரையும் பிரிக்க முடியாதது என்பதை உணர்ந்துதானே இந்தப் பெயரைச் சூட்டியுள்ளனர் நடிகர்கள். அப்படி இருக்கும்போது அந்த மதுரைக்காரர்கள் உயிராக நினைக்கும் ஜல்லிக்கட்டுக்குப் பிரச்சினை வந்தபோது இந்த நடிகர்கள் துடிக்கத் தவறியது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
குரல் கொடுக்கக் கூட வரலையே
இந்த அணியின் கேப்டனாக விஷாலை அறிவித்துள்ளனர். ஆனால் இவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒரு முறை கூட குரல் கொடுத்ததில்லை. இத்தனைக்கும் இவருக்குப் பெயர் பெற்றுக் கொடுத்தவை மதுரையை களமாக கொண்டு எடுக்கப்பட்ட படங்கள்தான். ஆனால் ஜல்லிக்கட்டுக்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாதவர் இன்று "மதுரை காளைஸ்" கேப்டன்!
காசுக்கு மட்டும் காளை தேவையோ
இப்போது சங்கம் கட்ட காசு தேவைப்படுகிறது. வாசல் கேட் முதல் ஹால், கக்கூஸ், நடிகர்களின் உடம்பை முறுக்கேற வைக்கும் ஜிம் வரைக்கும் சங்கத்தின் ஒவ்வொரு இன்ச்சுக்கும் மக்கள் பணம் தேவை. எனவேதான் கூச்ச நாச்சமே இல்லாமல் மதுரை காளைஸ் என்று பெயர் வைத்துக் கொண்டு அந்த மக்களின் பணத்தை வசூலிக்கக் கிளம்பி விட்டார்கள்.
அஜீத்தைப் பார்த்துத் திருந்தலாமே
இவர்கள் எல்லாம் அஜீத்தைப் பார்த்தாவது திருந்த முயற்சிக்கலாம் அல்லது திருந்தலாமே என்று நினைத்தாவது பார்க்கலாம். அதை விட்டு விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் மாட்டார்கள். ஆனால் அதே மக்களிடம் போய் அவர்கள் வைத்துள்ள காசைப் பறிக்கவும் தயங்க மாட்டார்கள் என்றால் இவர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது?
கொஞ்சமாவது திருந்துங்கப்பா!