குமாரசாமி தீர்ப்பு சர்ச்சை: ஜெ. மீண்டும் முதல்வராக பதவியேற்பது எப்போது?
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்பது எப்போது என்பதுதான் இப்போதை தலையாய கேள்வியாக உள்ளது.
நீதிபதி குமாரசாமி அளித்துள்ள தீர்ப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளதால் அவர் உடனடியாக பதவியேற்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும், எனவே பதவியேற்பு விழா குறித்த தேதி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அதற்கான ஆயத்தப் பணிகள், உடனடியாக துவக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் டூ மக்கள் முதல்வர்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு, செப்டம்பர் 27ஆம் தேதி பெங்களூரு தனி நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் இழந்தார். முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவை, மக்கள் முதல்வர் என்று அதிமுகவினர் அழைத்தனர்.
அழுகையோடு பதவியேற்பு
இதனையடுத்து முதல்வராக ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் அழுது கொண்டே பதவியேற்றனர். 8 மாத கால ஆட்சியில் முதல்வர் நாற்காலியில் அமராமல் பணி செய்த ஒரே முதல்வர் என்ற பெயரையும் பெற்றார் ஓ.பன்னீர் செல்வம்.
விடுதலையான ஜெ
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கர்நாடக உயர் நீதிமன்றம் அவர் குற்றமற்றவர் என்றும் தனி நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்தும் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு காரணமாக, ஜெயலலிதா மீண்டும் பதவியேற்க தகுதி பெற்றுள்ளார்.
மீண்டும் முதல்வர்
விடுதலை குறித்த அறிவிப்பு வெளியான கையோடு ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார் என்ற செய்திகள் வெளியானது. மே 17ஆம் தேதி ஜெயலலிதா பதவியேற்பார் என்றும் தேதியை குறிப்பிட்டு செய்திகள் வெளியிடப்பட்டன. இதனையடுத்து மகிழ்ச்சியோடு ஜெயலலிதாவை சந்தித்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
ஜோதிட ஆலோசனை
ஜெயலலிதா ஐந்தாவது முறையாக பதவியேற்கும் நாளை குறிப்பதில், ஜோதிட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றவாம். கடந்த 2011 தேர்தல் வெற்றிக்கு பின், மே 16ஆம் தேதி, அவர், நான்காவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அது நிலைக்கவில்லை என்பதால், அந்த தேதியில் பதவியேற்பு நடத்த வேண்டாம் என, யோசனை சொல்லப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எட்டு சரியில்லையே
மே 17ம் தேதி, அமாவாசை தினம் என்பதுடன், தற்போதைய ஆட்சியின் ஐந்தாவது ஆண்டு துவக்க நாள் என்பதாலும், அந்த நாளில், அவர் பதவியேற்கக் கூடும் என, முதலில் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது, 'அந்த நாள், ஜெயலலிதாவுக்கு உகந்த நாள் அல்ல' என்ற தகவல் சொல்லப்பட்டு உள்ளது; 17 என்றால், கூட்டுத்தொகை எட்டு வருகிறது; அது, அவருக்கு ராசியற்ற எண் என்பதால், 17ம் தேதி பதவியேற்பு இருக்காது என்று அதிமுக வட்டார தகவல்கள் உறுதியாக தெரிவித்துள்ளன.
15ஆம் தேதி இருக்குமோ?
எனவே, இந்த இரு தேதிகளுக்கும் இடைப்பட்ட, 15ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, பதவியேற்பு நடத்தலாமா என்பது குறித்து, போயஸ் தோட்டத்தில் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். ஆனால் தீர்ப்பில் உள்ள சர்ச்சைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பி வருவதோடு உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்கவும் முயற்சி செய்து வருகின்றன. எனவே பதவியேற்றாலும் உடனடியாக பதவியை இழக்க வேண்டுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மவுனம் ஏன்?
தீர்ப்பு வெளியான நாளிலும், அதற்கு அடுத்த நாளிலும், ஜெயலலிதா, கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட யாரையும் பார்க்கவில்லை. தொண்டர்களுக்கும் தரிசனம் தரவில்லை. செய்தியாளர்களை சந்தித்து, வெற்றி குறித்து கருத்து கூறுவார். அதுவும் நடைபெறவில்லை, அறிக்கை மட்டுமே வெளியானது. எனவே ஜெயலலிதாவின் இந்த மாற்றம் கட்சியினரிடம், பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
எம்.எல்.ஏக்கள் கூட்டம் எப்போது?
எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என, தகவல் பரவியது; ஆனால், கட்சி சார்பில், எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு செல்லவில்லை. ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், கட்சி தலைமையிடம் இருந்து, எப்போது வேண்டுமானாலும், அழைப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்புடன், சென்னையில் முகாமிட்டு உள்ளனர்.
தேதி அறிவிப்பு எப்போது?
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் தேதி முடிவான பிறகே, முதல்வர் பன்னீர்செல்வம் பதவி விலகுவார். அழுதுகொண்டே பதவியேற்ற அவர் சிரித்துக்கொண்டே பதவிவிலகப் போகும் காட்சியை நாம் பார்க்கலாம். அதன்பிறகே எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் போன்றவை நடைபெறும் என, கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு பின்னரே, பதவியேற்பு தேதி, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.