கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடை கூடாது- ஹைகோர்ட் கறார் உத்தரவு!
கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடை அமைக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடை அமைக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழக நெடுஞ்சாலையில் இருந்த 3,500-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இதனால் வேலையிழந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று பணிகளும் வழங்கப்படாததால் ஊருக்குள் கடை அமைக்க இடம் தேர்வு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மக்கள் போராடியும் பெண்களே கடைகளையும் ,பாட்டில்களையும் அடித்து துவம்சம் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் சேலம், கரூர், திருவண்ணாமலை, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தங்கள் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் உயர்நீதிமன்றம் தலையிட்டு தடை செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தனர்.
அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதி கூறுகையில், கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடை அமைக்கக் கூடாது, மேலும் மதுக்கடைகளுக்கு எதிராக போராடும் மக்களை போலீஸ் தாக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.