புலிக்கு வரிவிலக்கு கிடையாது... அறிவித்தது தமிழக அரசு!
சென்னை: 'நடிகர் விஜய் நடித்துள்ள, 'புலி' படத்துக்கு, கேளிக்கை வரி விலக்கு இல்லை' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தப் படத்தை பார்த்த, தேர்வுக் குழுவினர் ஆறு பேரும், 'கேளிக்கை வரி விலக்கு அளிக்க, தகுதியான படம் அல்ல' என அரசுக்குப் பரிந்துரை செய்தனர்.
தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் கருத்து:
பழனி, இணை கமிஷனர், வணிக வரித்துறை: 'மூட நம்பிக்கைகளை, உண்மை போல காட்டும் காட்சி, தமிழ் பண்பாட்டுக்கு உகந்ததாக இல்லை. மேலும், வன்முறை காட்சிகள் உள்ளன'.
தியாகராஜன், துணை இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம்:
பாடல் காட்சியின் சில இடங்களில் ஆபாசமாக இருக்கின்றன. குழந்தையின் கழுத்து அறுபடுவது, சண்டைக் காட்சியில் வன்முறை மற்றும் கொலை நேரடியாக இருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சேகர், இயக்குனர், தமிழ் வளர்ச்சித் துறை:
காட்சிகளில் மனித உயிருக்கு மதிப்பு அளிக்கவில்லை. குழந்தைகளையும், பெண்களையும், வெட்டிக் கொல்வது போன்ற காட்சிகள் ஏற்புடையதாக இல்லை. அதிகமான வன்முறைக் காட்சிகள் இருக்கின்றன.
மகராஜன், பின்னணி பாடகர்:
படம் முழுக்க, வன்முறை ஆக்கிரமித்துள்ளது. இரட்டை அர்த்த வசனங்கள், 12 வயது பெண் குழந்தை, கழுத்து வெட்டப்படுவதாக காட்டப்படுகிறது. படம் முழுக்க, மூடநம்பிக்கைக்கு, உயிரூட்ட முனைந்திருக்கின்றனர்.
ராகவன், பழம் பெரும் பின்னணி பாடகர்:
படத்தின் தலைப்பு, தமிழ் பெயர் கொண்டது. 'யு' சான்றிதழ் பெற்ற படம்; ஆபாசமில்லை; வன்முறை அதிகம் உள்ளது.
எம்.என்.ராஜம், பழம் பெரும் நடிகை:
ஆபாசம் இல்லை; ஆனால் வன்முறை அதிகமாக இருக்கிறது.
தேர்வுக் குழுவின் ஆறு உறுப்பினர்களுமே தங்கள் கருத்துக்களை பதிவு செய்து, வரி விலக்கு அளிக்க தகுதி இல்லை என, பரிந்துரை செய்துள்ளனர். அதை ஏற்ற அரசு, 'புலி' திரைப்படத்துக்கு, கேளிக்கை வரிவிலக்கு அளிக்க இயலாது என, அறிவித்துள்ளது.