ஒரு பதற்றமும் இல்லை ஓ.பி.எஸ் டீக்கடையில்... டென்ஷனே இல்லாமல் டீ ஆற்றுகிறார்கள்!
முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்ட ஓ. பன்னீர்செல்வத்தில் பெரியகுளம் பகுதியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. ஆனால் இதை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் இயல்பு வாழ்க்கை தொடருகிறது.
பெரியகுளம்: முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததில் தமிழகம் முழுவதும் கடும் அதிருப்தி நிலவுகிறது. ஆனால் இதைபற்றியெல்லாம் எந்த கவலையுமே இல்லாமல் சூடு பறக்க டீ,பஜ்ஜி வியாபாரம் வழக்கம்போல களைகட்டியது ஓ. பன்னீர்செல்வத்தின் பெரியகுளம் டீ கடையில்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் அமரவைக்கப்பட்டார் ஓ. பன்னீர்செல்வம். அவர் பதவியில் அமர்ந்தது முதலே மன்னார்குடி கோஷ்டி நெருக்கடி கொடுத்து வந்தது.
சசிகலா தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகளால் தற்போது முதல்வர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துவிட்டார். முதல்வர் நாற்காலியை கைப்பற்றி சசிகலா சாதித்துவிட்டார்.
பெரியகுளத்தில்...
ஆனால் சசிகலா முதல்வராவதை தமிழக மக்களால் சகிக்க முடியவில்லை. அதேநேரத்தில் எப்படி எதிர்ப்பு தெரிவிப்பது என தெரியாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வத்தின் பெரியகுளத்தில் என்ன சூழல் நிலவுகிறது என நாம் அங்கு விசிட் அடித்துப் பார்த்தோம்.
ஓபிஎஸ் டீ கடையில்..
நாம் போனது முதலில் பெரியகுளத்தில் கம்பம் பிரதான சாலையில் தேவர் சிலை அருகே உள்ள பெயர் பலகையே இல்லாத ஓ. பன்னீர்செல்வத்தின் டீ கடைதான்.. ஓபிஎஸ் ராஜினாமா பற்றியெல்லாம் வெளிக்காட்டாமல் வழக்கம்போல சார் சூடா பஜ்ஜி இருக்கு; சட்னி வைக்கவா? என்ற குரல்தான் வரவேற்றது...
நோ அரசியல்
அதிமுக கரை வேட்டிய கட்டியநபர்களும் டீ கடையை எட்டிப் பார்த்து சூடா டீ சாப்பிட்டபடியே ஏதோ ஒரு மவுனத்தை மட்டும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்... ஆனாலும் நடப்பு அரசியலை அங்கு பேசிவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.
பணியாளர்கள் குமுறல்...
அதே நேரத்தில் டீ கடையில் பணியாற்றும் பணியாளர்கள் அவ்வப்போது 'முதலாளி' பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டது பற்றிய குமுறல்களை சக ஊழியர்களிடம் கொட்டிக் கண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. அதாவது அடங்கா ஒரு அதிருப்தி அமைதியாக நிலவியதை ஓபிஎஸ் டீ கடையில் நாம் காண முடிந்தது.