முல்லைப் பெரியாறு அணைக்கு 'புலிகளால்' அச்சுறுத்தல் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பல்டி
சென்னை: விடுதலைப்புலிகளால் முல்லைப்பெரியாறு அணைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு, ஒரு கூடுதல் மனுவினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப்பெரியாறு அணை வளாகத்தில் ஒரு சில கேரள அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில், ஒரு சிலர் வன்முறையில் ஈடுபட்டு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வாயிற்கதவினை சேதப்படுத்தியதாக 3.12.2011 அன்று பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து, 4.12.2011 அன்று ஒரு சிலர் வல்லக்கடவு பகுதி வழியாக முல்லைப்பெரியாறு அணையிலிருந்து நீரை வெளியேற்றவும் மற்றும் அணைக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும் கருவிகள், எந்திரங்கள் ஆகியவற்றை எடுத்துச்சென்றதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.
இவ்வாறு செய்திகள் வந்ததை அடுத்து, முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு 4.12.2011 அன்று அனுப்பிய கடிதத்தில், முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பிற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினை அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டார்.
முல்லைப்பெரியாறு அணை மற்றும் அதனைச் சார்ந்த கட்டுமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை மத்திய அரசு அனுப்பிவைக்கவேண்டும் என ஆணை பிறப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு 5.12.2011 அன்று உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றினை தாக்கல் செய்தது.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 14.12.2011 நாளிட்ட அலுவலக குறிப்பாணையில், மத்திய தொழில் பாதுகாப்புப்படை உள்ளிட்ட மத்திய படைகளை அணையின் பாதுகாப்பிற்காக நீதிமன்ற ஆணையின் அடிப்படையிலோ அல்லது சம்பந்தப்பட்ட மாநில அரசிடமிருந்து பெறப்படும் கோரிக்கையின் அடிப்படையிலோ மட்டுமே அனுப்பிவைக்க முடியுமென்றும், மேலும், ‘காவல்' மற்றும் "பொது ஒழங்கமைதி" ஆகிய பொருண்மை அரசமைப்புப்படி மாநிலத்தைச் சார்ந்தவையாகும் என்றும், மாநிலத்திற்கு உதவும் வகையில் சம்பந்தப்பட்ட மாநிலம் கேட்டுக்கொள்ளுமேயானால் இத்தகைய படைப்பிரிவினை அனுப்பிவைக்க இயலும் என்றும் உச்சநீதிமன்றத்திற்கு தெரிவித்தது.
கேரள அரசு, அணை பாதுகாப்பிற்காக போதுமான காவலர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் எனவும், அணையைப் பாதுகாப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் கேரள அரசு மேற்கொள்ளும் எனவும் உச்சநீதிமன்றத்திற்கு உறுதியளித்தது. இந்த உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் இந்த இடைக்கால மனு முடிவுக்கு கொண்டு வரப்படுகிறதென 15.12.2011 அன்று ஆணை பிறப்பித்தது.
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றபோது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கெல்லாம் பாதுகாப்பாக இருந்து அந்த ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து வந்த தி.மு.க. மத்திய அரசை இதுகுறித்து ஏன் வலியுறுத்தவில்லை? அல்லது மத்திய தொழில் பாதுகாப்பு படையை அனுப்பவேண்டாம் என தி.மு.க.தான் மத்திய காங்கிரஸ் அரசுக்கு அறிவுரை வழங்கியதா? என்பதை கருணாநிதி தான் விளக்க வேண்டும்.
கருணாநிதி தடையா?
அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், கருணாநிதியின் ஆலோசனையின்படியே தாம் செயல்படுவதாக வெளிப்படையாகவே தெரிவித்திருந்தாரே! அப்படியெனில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை மத்திய அரசு அனுப்புவதற்கு தடையாக இருந்தது கருணாநிதியும், தி.மு.க.வும் தானா?
கேரளா போலீஸ்
17.11.2014 அன்று கேரள சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோருடன் முன்னறிவிப்பு ஏதுமின்றி தமிழக அலுவலர்களை புறம் தள்ளிவிட்டு முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்கு சென்றார். இதுகுறித்து கேரள காவலர்களுக்கு, தமிழ்நாடு பொறியாளர்கள் தெரிவித்த போதிலும், அவர்களால் எந்த நடவடிக்கையையும் எடுக்க இயலவில்லை.
நுண்ணறிவுப் பிரிவு அறிக்கை
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் 3.7.2015 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து உச்சநீதிமன்றம் பதிவு செய்துகொள்ள வேண்டி, கூடுதல் ஆணை உறுதி ஆவணம் ஒன்றை 1.7.2015 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. இந்த கூடுதல் ஆணை உறுதி ஆவணத்தில் 12.5.2015 அன்று மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்துடன் மத்திய நுண்ணறிவுப் பிரிவின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய தொழில் பாதுகாப்பு படை
இந்த கூடுதல் ஆணை உறுதி ஆவணத்தில் தமிழ்நாடு அரசால் 19.11.2014 அன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு 17.4.2015 அன்று கேரள அரசால் தாக்கல் செய்யப்பட்ட எதிர் உறுதி ஆவணத்திற்கு பின்னர் நிகழ்ந்த நிகழ்வுகளை உச்சநீதிமன்றம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
12.5.2015 அன்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், 2014ம் ஆண்டு செப்டம்பர் 16 முதல் 18 வரை முல்லைப்பெரியாறு அணை மற்றும் பெரியாறு நீர்மின் நிலையம் ஆகியவற்றில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு மேற்கொண்ட ஆய்வின்படி, கேரள காவல் துறைக்கு பதிலாக, மத்திய தொழில் பாதுகாப்பு படை அல்லது மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை மூலம் முல்லைப்பெரியாறு அணை பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
விடுதலைப்புலிகள்
முல்லைப்பெரியாறு அணை மற்றும் இதர முக்கிய நிர்மாணங்களின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அல்லது மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போன்ற தொழிலியல் பாதுகாப்பு படை ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற மத்திய நுண்ணறிவுப் பிரிவின் அறிக்கையை உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார் என்றும், மத்திய அரசு உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படை அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பு படையை முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பிற்கு அனுப்பிவைக்க தமிழக தலைமைச் செயலாளர், மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார் என்றும், தெரிவித்து, தலைமைச் செயலாளரின் கடித நகல் இணைக்கப்பட்டுள்ளது என்றும் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்ததுபோல், விடுதலைப்புலிகள் மீது எந்தவித குற்றச்சாட்டையும் தமிழக அரசு சுமத்தவில்லை.
ஜெயலலிதா விசாரணை
ஊடகங்களில் இதுபோன்ற செய்திகள் வந்தவுடன், முதல்வர் ஜெயலலிதா, இது பற்றி என்னிடமும், அரசு உயரதிகாரிகளிடமும் விவாதித்தார். அப்போது மத்திய நுண்ணறிவு பிரிவின் ஆய்வு அறிக்கையின் நகலை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது என்பது முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுத்துச்சொல்லப்பட்டது.
இந்தியாவிற்கு எதிரான நிலை
அந்த அறிக்கையில், மத்திய நுண்ணறிவுப் பிரிவு முல்லைப்பெரியாறு அணை மற்றும் முக்கிய நிர்மாணங்கள் ஆகியவற்றுக்கு லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது நக்சலைட்டுகள் போன்ற அமைப்புகளால் உள்ள அச்சுறுத்தல்கள் பற்றி தெரிவித்துள்ளதோடு பத்தி 4.4-ல் இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டபின் மீதமுள்ள உறுப்பினர்கள் ஒன்று திரள முயற்சித்துள்ளனர் என்றும், அவர்கள் இறுதிப்போரில் தமிழர்களுக்கு இந்தியா உதவி செய்யாததால், இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தல் இல்லை
மேலும், முக்கிய நிர்மாணங்களுக்கு இவர்களிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பாக எதுவும் இல்லை என்றாலும், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதிலும்கூட விடுதலைப்புலிகள் முல்லைப்பெரியாறு அணைக்கு சேதம் விளைவிப்பார்கள் என்று குறிப்பிட்டு, மத்திய நுண்ணறிவுப் பிரிவு தெரிவிக்கவில்லை.
தமிழக அரசு கூடுதல் மனு
இருப்பினும், இதுகுறித்து தேவையற்ற விவாதமும், மனக்கசப்பும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக உள்ள ஜெயலலிதாவின் அரசின் மீது வீண் பழியும் சுமத்தப்படுவதால், தமிழக அரசு, ஒரு கூடுதல் மனுவினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு ஏற்கவில்லை
இந்த கூடுதல் மனுவில், மத்திய நுண்ணறிவுப் பிரிவு அச்சுறுத்தல் பற்றி அதனுடைய அறிக்கையில் பத்தி 4-ல் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளில், 4.1 முதல் 4.3 மற்றும் 4.5 முதல் 4.8 வரையிலான மதிப்பீடுகள் மட்டும் தமிழக அரசிற்கு ஏற்புடையது என்றும், விடுதலைப்புலிகள் குறித்து பத்தி 4.4-ல் மத்திய நுண்ணறிவுப் பிரிவின் குறிப்பை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்ற விவரத்தை இந்த கூடுதல் மனுவில் குறிப்பிட்டு தாக்கல் செய்யும்படி ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் அறிவுரையின்படி, உச்சநீதிமன்றத்தில் இதற்கான மனு உடனடியாக தாக்கல் செய்யப்படும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.