14 மணி நேர அநாவசிய சட்டப் போராட்டம்!
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகிலேயே அடக்கம் செய்ய இடம் தராமல் மறுத்ததன் மூலம் தேவையற்ற கால விரயம், அனாவசிய சட்டப்போராட்டம் ஏற்பட்டது. 14 மணி நேரங்கள் மொத்த இந்தியாவையும் இவ்வழக்கு பரபரப்புக்குள்ளாக்கியிருந்தது.
திமுக தலைவர் கருணாநிதி தேசிய அளவில் மிகப் பெரிய ஆளுமை. அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 11 நாட்களில் குடியரசுத் தலைவர் முதல் நாட்டின் கடைசி குடிமகன் வரை காவிரி மருத்துவமனைக்கு படையெடுத்து வந்ததை இந்தியாவே வியந்து பார்த்தது.
கருணாநிதி பற்றி அறியாத, வட இந்தியாவின் இன்றைய இளம் தலைமுறையினரை கூட "யார் இந்த திராவிட ஆளுமை" என இந்த 11 நாட்களில், திரும்பி பார்க்க வைத்தார் கருணாநிதி.
|
உலக தலைவர்
அமெரிக்கா முதல் இலங்கை வரை கருணாநிதி மறைவுக்கு இரங்கல் செய்தி வந்து கொண்டிருப்பதும் சர்வதேச ஊடகங்களான வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், பிபிசி உள்ளிட்டவற்றில் கருணாநிதியின் மறைவு செய்தி வந்திருப்பதும் சர்வதேச அரங்கிலும் அவர் எத்தகைய ஆளுமை என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது
சிப்பிக்கு தெரியுமா முத்து அருமை
விலை மதிப்புள்ள முத்தை தனக்குள் வைத்திருக்கும் சிப்பிக்கு அதன் அருமை தெரியாது என்பதை போல, உலகமே வியந்து பாராட்டும் ஒரு தலைவரின் அருமை, பெருமைகளை அவர் எந்த மாநிலத்திற்காக பாடுபட்டாரோ அநத சொந்த மாநிலத்தின் ஒரு பிரிவினரே அறியாமல் இருந்ததன் விளைவு தான் அவருக்கு மெரினாவில் இடம் தர மறுத்த செயல்.
கொந்தளித்த தமிழகம்
கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு மரணமடைந்துவிட்டதாக மாலை 6.30 மணிக்கு காவேரி மருத்துவமனை செய்திக்குறிப்பு வெளியிட்டது. மொத்த தமிழர்களின் தலையில் இடியாய் விழுந்தது இந்த செய்தி. அழுது புரண்டனர், அவர் தம் சாதனைகளை எண்ணி வியந்தனர். ஆனால் எல்லாம் சில நிமிடங்கள்தான். மெரினாவில் கருணாநிதிக்கு அடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்யுமாறு நாங்கள் கேட்டுக் கொண்டும் முதல்வர் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டி மொத்த தமிழகத்தையும் கொந்தளிப்புக்குள்ளாக்கியது.
மொத்த இந்தியாவும் ஒரே குரலில்
"கலைஞர் வாழ்க" என்று விண்ணதிர எழுந்துவந்த கோஷம் அப்படியே மாறி "மெரினா வேண்டும்", "மெரினா வேண்டும்" என்று ஒலிக்கத் தொடங்கியது. இந்த கோஷம் சென்னையைத் தாண்டி தமிழகமெங்கும் பரவியதோடு இணையதளத்தில் தேசிய அளவில் ட்ரெண்டாகியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல் ரஜினிகாந்த் வரை கருணாநிதிக்கு மெரினாவில் தான் இடம் கொடுக்க வேண்டும் என்பதை அழுத்தி கூறினர். மத்தியிலும், மாநிலத்திலும், 'இருதரப்பை' தவிர மொத்த இந்தியாவும் இந்த குரலைத்தான் எதிரொலித்துக்கொண்டிருந்தது. ஆனால் இடம் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தது அரசு.
கோபாலபுரத்தில் கருணாநிதி கோர்ட்டில் வாதம்
நள்ளிரவில் வழக்கு தொடர்ந்தது திமுக. கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் உடலை வைத்து விட்டு கோர்ட்டுக்கு அலைந்தனர் திமுக வழக்கறிஞர்கள். வாதம் நடந்தது.. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது அரசு. மறுநாளைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நள்ளிரவிலும் அந்த சஸ்பென்ஸ் அப்படியே நீடித்தது. மொத்த இந்திய ஊடகங்களும் இந்த நிகழ்வை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தன. இந்திய அளவில் தமிழகத்தின் அடையாளமாக விளங்கும் கருணாநிதிக்கு விரும்பிய இடத்தில், ஆறடி நிலம் கூட தமிழக அரசு முன்வரவில்லை என்ற விவாதம் தேசிய அளவில் விவாதப்பொருள் ஆகியது.
கோர்ட்டை நோக்கி அனைவர் கவனமும்
இன்று காலை நடைபெற்ற அனல்பறக்கும் வாதத்தின் முடிவில், அண்ணா சமாதி அருகே கலைஞருக்கு இடம் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை ஆணித்தரமாக எடுத்து வைத்தனர் திமுக வழக்கறிஞர்கள். ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அத்தனை பேரின் கவனமும் நீதிபதிகளின் ஒற்றை வார்த்தையை நோக்கியே உற்றுப் பார்த்தபடி இருந்தது. காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் "அண்ணா சமாதி அருகே கருணாநிதிக்கு சமாதி அமைக்க இடம் ஒதுக்கித் தருமாறு" உத்தரவிட்டனர். அரசியல் மட்டுமல்லாது, பல்வேறு தளங்களில் பல நூறு சாதனைகளை நிகழ்த்தியவர் கருணாநிதி. அதை பற்றி பேசினால், ஒவ்வொரு துறைக்கும் ஒரு நாள் என்பதுகூட குறைவுதான். ஆனால் அவர் மறைந்த அன்றைய தினம்கூட, அவர் சாதனைகளையும், ஆளுமையையும், தமிழக மக்கள் மட்டுமின்றி, இந்தியாவுமே நினைந்து பார்க்கக்கூடிய ஒரு தருணத்தை தேவையற்ற ஒரு உத்தரவு நேர விரயம் செய்யப்பட்டுவிட்டது.
மிக்க நன்றி
பள்ளியில் படிக்க இடம் கேட்டு குளத்தில் குதிக்கப்போவதாக கூறி, சின்னஞ்சிறு வயதில் போராட்டத்தை நடத்தி வென்றவர் கருணாநிதி. உடலை பாதித்த பல பிரச்சினைகளுடனும், எதிரிகள், துரோகிகள் என அரசியலிலும் தொடர்ந்து போராட்டங்களை சந்தித்தவர் கருணாநிதி. பிறவிப்போராளியான கருணாநிதி, இறந்த பிறகும், போராடி தனக்கான இடத்தை பெற்றுள்ளார். ஒரு போராளியின் வழியனுப்புதல் இதைவிட சிறப்பாக இருக்க முடியாது. கருணாநிதியின் போர்க்குணத்தை உலகிற்கே பறைசாற்ற செய்ததற்காக, தமிழக மக்கள் தமிழக அரசுக்கு கண்டிப்பாக நன்றிக்கடன்பட்டுள்ளார்கள்.