தமிழக அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்னையில் துணை நின்றது இல்லை: அய்யாக்கண்ணு
தமிழக அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்னையில் துணை நின்றது இல்லை என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் : தமிழக அரசியல் கட்சிகள் என்றைக்குமே விவசாயிகள் பிரச்னையில் துணை நின்றது இல்லை என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மாநில சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மரபணு விதைகளுக்கு எதிராக விழிப்பு உணர்வு பயணம் மேற்கொண்டுள்ள தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மதுராந்தகம், எண்ணத்தூர், உத்திரமேரூர், வேடந்தாங்கல் பகுதிகளில் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்த அவர், மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை சந்தித்துப் பாலாற்றில் தடுப்பணை கட்டுவது குறித்தும், சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது குறித்தும் மனு அளித்தார்.
பின்பு நிருபர்களைச் சந்திக்கையில், விவசாயிகளுக்கான உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க யாரும் முயற்சி செய்யவில்லை. எல்லா ஆட்சியிலும் விவசாயிகள் அடிமையாகவே இருந்து வந்துள்ளனர்.
அதிமுக, திமுக, விசிக உள்ளிட்ட எந்த கட்சியும் விவசாயிகளின் பிரச்னையில் உறுதுணையாக இருந்தது இல்லை. மத்திய, மாநில அரசுகள் இனி எந்த திட்டத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் அதனை தொடர்ந்து எதிர்ப்போம். நிச்சயம் நீதிமன்றம் செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.