காலியிடங்கள் அதிகரிப்பு… இட மாறுதல் இல்லை… தவிக்கும் சத்துணவு ஊழியர்கள்
நெல்லை: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விருப்ப இடமாறுதல் கேட்டு சத்துணவு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1200 சத்துணவு பணியாளர்கள் பணியிடம் காலியாக இருக்கிறது. இதனால் பலர் இதில் கூடுதலாக வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சத்துணவு திட்டம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பள்ளிகளில் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பால்வாடி மற்றும் ஊட்டசத்து மையங்களில் 1 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பலர் உயர் கல்வி படித்தவர்களும் அடக்கம்.
சத்துணவு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளாக யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது இவர்களின் புகாராக உள்ளது. இவர்களது ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றில் பல்வேறு பிரச்சனைகள் நிலவுகின்றன.
சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என மூன்று பேர் பணியில் இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் சொற்பமாகும். சத்துணவு அமைப்பாளர் என்றால் ரூ.8 ஆயிரம், சமையலருக்கு ரூ.3 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசிககு ஏற்ப பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஊழியர்களின் விருப்ப இடமாறுதலையும் நிர்வாகம் கணடு கொள்ளவிலலை என்று கூறப்படுகிறது. இவர்களில் பலர் பல ஆண்டுகளாக விருப்ப இடமாறுதல் கேட்டு காத்திருக்கின்றனர்.
இதில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1200 சத்துணவு பணியாளர்கள் பணியிடம் காலியாக இருப்பதால் பலர் கூடுதலாக வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.