கூட்டணி சேர்ந்தாலும்… ஊர் கூடி தேர் இழுக்க ஆள் இல்லையே… பாஜக கூட்டணியின் நிலை இதுதான்!
சென்னை: அதிமுகவில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த கையோடு தொகுதிவாரியாக பிரசாரம் கிளம்பிவிட்டார் ஜெயலலிதா. நட்சத்திர பேச்சாளர்கள் 40 பேர் வரை களம் இறக்கப்பட்டுள்ளனர் அதிமுகவில்.
திமுகவில் தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் என பிரசாரம் செய்து வருகின்றனர். கனிமொழி, குஷ்பு, தவிர நட்சத்திரப் பேச்சாளர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார். கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் அவர்கள் போட்டியிடும் 18 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.
பாஜக கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தவிர வேறு யாரும் தமிழக பிரசார களத்தில் இறங்கவில்லை. மார்ச் 20ம் தேதி சென்னை வந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூட்டணி தொகுதிப் பங்கீடு பற்றி அறிவித்து விட்டுப் போனார். அதன்பிறகு மதிமுக, தேமுதிக, பாமகவினர் சுறுசுறுப்பாக வேட்பாளர்களை அறிவித்த கையோடு பிரசாரம் கிளம்பிவிட்டனர்.
பாஜக வேட்பாளர்கள்
பாஜக நேற்று வரை வேட்பாளர்களை அறிவிப்பதில் மந்த நிலையே நிலவியது. முக்கியத்தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், இல. கணேசன், ஆகியோர் அவரவர் தொகுதியில் கவனம் செலுத்தி வருவதால் இன்னமும் மற்ற தொகுதிகளில் பிரசாரத்திற்கு கிளம்ப முடியவில்லை.
ஹெச். ராஜா, வானதி சீனிவாசன்
ஹெச்.ராஜா சிவகங்கையில் சிதம்பரத்திற்கு எதிராக முடங்கிப் போயிருக்கிறார். பாஜகவின் முக்கிய செயலாளர்களான தமிழிசை சவுந்திரராஜன், வானதி சீனிவாசன், ஆகியோருக்கு சீட் கொடுக்காத காரணத்தால், அவர்களும் பிரசாரத்திற்கு கிளம்பி வருவதாக தெரியவில்லை. கடைசி கட்டத்தில் வந்தால்தான் உண்டு.
டெல்லி பாஜக தலைவர்கள்
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு ஆகியோர் எப்போது தமிழகம் வருவார்கள் என்று இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.
வைகோ பிரசாரம்
கூட்டணிக் கட்சியான மதிமுகவில் பொதுச்செயலாளர் வைகோ, விருதுநகர் தொகுதியில் கிராமம், கிராமமாக சுற்றி வருகிறார். 5முனை போட்டியில் வென்றாக வேண்டுமே என்ற பதற்றம் அவருக்கு உள்ளது.
கோபத்தில் ராமதாஸ்
அதேபோல கூட்டணியில் கோபம் இருப்பதால் உடல்நிலையைக் காரணம் காட்டி தைலாபுரத்தில் ஓய்வெடுக்கப் போய்விட்டார் டாக்டர் ராமதாஸ். அவரது கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களான அன்புமணியும், ஜி.கே.மணியும், தர்மபுரி, கிருஷ்ணகிரி தொகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.
ஈஸ்வரன் – பச்சமுத்து
அதேபோல கொங்கு ஈஸ்வரனும், ஐ.ஜே.கே பச்சமுத்துவும் அவரவர் தொகுதியை கவனித்து வருகின்றனர். கூட்டணிப் பங்காளிகள் 6 பேர் இருந்தாலும் தேமுதிக மட்டுமே அனைத்து தொகுதிகளையும் கவர் செய்து வருகிறது.
விஜயகாந்த் கோபம்
முதற்கட்ட பிரசாரம் முடிந்து இரண்டாம் கட்ட பிரசாரமும் கிளம்பிவிட்டார் விஜயகாந்த். ஆனால் இம்முறை நெல்லையில் ஆரம்பித்து ஆலந்தூரில் முடிக்கிறார். தேமுதிக போட்டியிடும் 14 தொகுதிகளில் மட்டுமே விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுவதால் கூட்டணிக் கட்சியினர் திகிலடித்துப் போயுள்ளனர்.
பாஜக – மதிமுக
பாமக வாக்குவங்கி இல்லாத தொகுதிகளில்தான் பாஜகவும், மதிமுகவும் களம் காண்கின்றன. இதனால் இந்த கட்சி வேட்பாளர்கள் கவலைப்படாமல் வலம் வருகின்றனராம். இந்தக் கூட்டணியில் அதிகம் பாதிக்கப்பட்டது தேமுதிகவினர்தான் என்கின்றனர்.
தேமுதிக தொகுதிகளின் நிலை
தேமுதிக போட்டியிடும் கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, சேலம், வடசென்னை ஆகிய தொகுதிகளில் பாமகவின் டாக்டர் ராமதாஸ், குரு ஆகியோர் பிரசாரம் செய்தால் மட்டுமே பாமக வாக்குகளை அள்ளமுடியும். ஆனால் அவர்கள் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
மோடி பிரதமர்
விஜயகாந்த் மட்டுமே பிரசாரம் செய்யும் தொகுதிகளில் எல்லாம், கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று கூறி வருகிறார். அவரது மனைவி பிரேமலதாவும் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்கிறார்.
பெரிய கூட்டணி
பாஜக கூட்டணியில் பாஜக, தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., கொங்கு நாடு, மக்கள் தேசிய கட்சி, ஐ.ஜே.கே., கட்சிகள் உள்ளன. தே.மு.தி.க.வுக்கு 14 தொகுதிகளும் பா.ஜனதா, பா.ம.க.வுக்கு தலா 8 தொகுதிகளும், ம.தி.மு.க.,வுக்கு 7 தொகுதிகளும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, ஐ.ஜே.கே. கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப் பட்டுள்ளன.
தொண்டர்களின் சுணக்கம்
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தமிழ் நாட்டுக்கு வரும் போது கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் தோன்றுவார்கள் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக அனைத்து தொகுதிகளுக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் பிரசாரத்துக்கு செல்லாமல் இருப்பது அந்த கூட்டணி கட்சி தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிற கட்சியினரின் நையாண்டி
பாஜக கூட்டணி அமைப்பதற்கு ஏற்பட்ட சிக்கல்கள் ஓரளவு சரி செய்யப்பட்டு, கூட்டணி அமைவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. இப்போது, பாஜக கூட்டணி கட்சிகள் பிரசாரத்தை ஒருங்கிணைத்து கொண்டு செல்வதற்கு என்ன பாடுபடப் போகிறார்களோ தெரியவில்லை என்று மற்ற கட்சி தொண்டர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
அதிருப்திக்கூட்டணி
வேட்பாளர்கள் தங்கள் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து விட்டு வேறு தொகுதியில் பிரசாரம் செய்வார்கள் என்பதை ஏற்கலாம். ஆனால் போட்டியிடாத கூட்டணி தலைவர்கள் நட்சத்திர பேச்சாளர்கள், பிரமுகர்கள் கூட தங்கள் கட்சி போட்டியிடும் தொகுதியை தவிர கூட்டணி கட்சி குறித்து கவலைப்படாமல் இருப்பது அந்த கூட்டணியில் உள்ள அதிருப்தியை தான் காட்டுகிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.