6 நாட்களாக அப்பல்லோவிலிருந்து எந்த "அப்டேட்"டும் வரவில்லை! #jayalalithaa
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை கடந்த 6 நாட்களாக எந்த அறிக்கையும் அளிக்காமல் உள்ளது. இதுவரை 10 அறிக்கைகளை வெளியிட்டுள்ள அப்பல்லோ கடந்த 6 நாட்களாக அறிக்கை எதையும் வெளியிடாமல் உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது முதல் அவ்வப்போது அப்பல்லோவிலிருந்து அறிக்கைகள் வெளியாகிக் கொண்டுள்ளன. இதுவரை 10 அறிக்கைகள் வந்துள்ளன. அதில் ஒரே ஒரு முறை மட்டுமே மிக விரிவான அறிக்கையை அப்பல்லோ வெளியிட்டது.
இந்த நிலையில் கடந்த 6 நாட்களாக எந்த அறிக்கையும் வரவில்லை. கடைசியாக 10ம் தேதிதான் அறிக்கை வெளியானது. அதற்குப் பிறகு எந்த அறிக்கையும் வரவில்லை.
செப்டம்பர் 22ல் அனுமதி
செப்டம்பர் 22ம் தேதி இரவு முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பானது. முதல்வர் உடல் நலனுக்கு என்ன என்ற பெரும் கவலை அதிமுகவினர் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியலும் நிலவியது.
23ம் தேதி முதல் அறிக்கை
அடுத்த நாள் அப்பல்லோ வெளியிட்ட முதல் அறிக்கையில் முதல்வர் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை மூலம் சாதாரண காய்ச்சல் காரணமாக முதல்வர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவே அனைவரும் நினைத்தனர்.
2வது அறிக்கை
அடுத்து வெளியான 2வது அறிக்கையில் முதல்வருக்கு காய்ச்சல் குணமாகி விட்டதாகவும், அவர் வழக்கமான உணவு சாப்பிடுகிறார் என்றும் கூறியிருந்தது. இதனால் முதல்வர் குணமடைந்து விட்டதாகவே அனைவரும் கருதினர்.
3வது அறிக்கை
செப்டம்பர் 24ம் தேதி 3வது அறிக்கை வெளியானது. அதில் முதல்வர் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளதாகவும், இயல்பான உணவை தொடர்வதாகவும் கூறியிருந்தனர்.
4வது அறிக்கை
அடுத்து செப்டம்பர் 29ம் தேதி நான்காவது அறிக்கை வெளியானது. அதில் முதல்வர் சில நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. சிகிச்சைக்கு முதல்வர் ஒத்துழைப்பு தருவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
அக்டோபர் 2ல் 5வது அறிக்கை
அதுவரை வந்த அறிக்கைகளில் இது சற்று விரிவானதாக இருந்தது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் வருகை குறித்து அதில் கூறப்பட்டிருந்தது. மேலும் முதல்வருக்கு என்ன மாதிரியான பிரச்சிஎனை என்பது குறித்தும் அதில் லேசுபாசாக சொல்லப்பட்டிருந்தது. முதல்வருக்கு நோய் தொற்றைக் குணப்படுத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
6வது அறிக்கை
அக்டோபர் 3ம் தேதி 6வது அறிக்கை வெளியானது. அதில் முதல்வருக்கு செயற்கை சுவாசம் தரப்படுவதாக கூறப்பட்டிருந்தது. முதல்வருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதை இந்த அறிக்கை சற்று சுட்டிக் காட்டியிருந்தது.
7வது அறிக்கை
அக்டோபர் 4ம் தேதி 7வது அறிக்கையை அப்பல்லோ வெளியிட்டது. முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடருவதாகவும், அவர் சில நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
பரபரப்பைக் கிளப்பிய 8வது அறிக்கை
அப்பல்லோ வெளியிட்ட 8வது அறிக்கைதான் மிக மிக விரிவான அறிக்கையாக இருந்தது. அதில் அவருக்கு பல்வேறு வகையான சிகிச்சை தரப்படுவதாக கூறியிருந்த அப்பல்லோ நிர்வாகம், முதல்வர் நீண்ட நாட்களுக்கு தங்கியிருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. முதல்வருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை தரப்படுவதாகவும் அது கூறியிருந்தது.
9வது அறிக்கை
9வது அறிக்கை அக்டோபர் 8ம் தேதி வெளியானது. அதில் நுரையீரல் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை தொடருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பிசியோதெரப்பி தரப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.
கடைசி அறிக்கை
கடைசியாக அக்டோபர் 10ம் தேதி பத்தாவது அறிக்கையை வெளியிட்டது அப்பல்லோ. அதில் முதல்வருக்குத் தேவையான சுவாச உதவிகள், ஊட்டச் சத்துணவு, ஆன்டிபயாட்டிக்ஸ், சப்போர்டிவ் தெரப்பி, பிசியோதெரப்பி உள்ளிட்டவை தரப்படுவதாக கூறப்பட்டிருந்தது. எய்ம்ஸ் குழுவினரின் வருகை குறித்தும் கூறப்பட்டிருந்தது.
அசைக்க முடியாத நிலையில் உள்ளதா முதல்வரின் உடல் நிலை?
வழக்கமாக உடலில் தசை இயக்கம் சரியாக இல்லை என்றால் அதாவது உடலை அசைக்க முடியாத நிலையில் இருந்தால்தான் பாசிவ் பிசியோதெரப்பி தருவார்கள். அப்படியானால் முதல்வரின் உடலை அசைக்க முடியாத நிலையில் அவரது உடல் நலம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
6 நாட்களாக அறிக்கை இல்லை
அப்பல்லோவிலிருந்து கடைசியாக அக்டோபர் 10ம் தேதிதான் அறிக்கை வந்தது. அதன் பின்னர் எந்த அறிக்கையும் வரவில்லை. எந்த அப்டேட்டும் இல்லை. முதல்வருக்கு தற்போது என்ன மாதிரியான சிகிச்சை தொடருகிறது என்பதும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் சிங்கப்பூர் குழுவினரும் சிகிச்சையில் இணைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.