முஸ்லீம் சமுதாயத்தின் ஒரே பிரதிநிதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்தான்... பேராசிரியர் காதர் மொகிதீன்
சென்னை: சிறுபான்மையின மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி, அரசியல் நடத்தும் கட்சி இ.யூ. முஸ்லிம் லீக் தான் என்பதை இன்றைக்கு முஸ்லிம் மக்கள் நன்கறிந்திருக்கிறார்கள்; ஒட்டு மொத்த சமுதாயத்தின் கருத்தில், இ.யூ. முஸ்லிம் லீக் இன்றைக்கு தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் பிரதி நிதித்துவ சபை என்பது நிலை நாட்டப்பட்டிருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காதர் மொகிதீன் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே 16-ஆம் தேதி திங்கள்கிழமை நடக்க இருக்கிறது. தேர்தல் முடிவுகள் அதே மே மாதம் 19ஆம் தேதி வியாழக்கிழமை அறிவிக்கப்படவிருக்கிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஏப்ரல் 22ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் தங்களின் விருப்ப மனுக்களை உரிய தேர்தல் அதிகாரிகளிடத்தில் அளிக்க இருக்கிறார்கள்.
2016ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலைஞர் ஆட்சி மலர வேண்டும்; தமிழகத்தில் கவ்வியிருக்கும் இருளை நீக்கும் நல்லாட்சியின் ஒளி புலர வேண்டும்; தமிழகத்தில் உருவாகும் மக்கள் நல ஆட்சியின் பெருமையை இந்திய மாநிலங்கள் மட்டுமின்றி, உலக அரங்கில் உள்ள நாட்டினரும் உணர வேண்டும். இந்த இலட்சியத்தை எட்டிப் பிடிக்கும் குறிக்கோளுடன் தான் தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது அரசியல் தோழமையை - உறவை - உடன்பாட்டைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தை இன்றைக்கு ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசு, தன்னால் தான் கெட்டுள்ள அரசாகி விட்டது. ஆளும் அரசை வீழும் அரசாக மாற்றி, தி.மு.க. தலைமையிலான நல்லரசை புனித ஜார்ஜ் கோட்டையில் நிறுவ ஏலும் என்பதால்தான் இந்திய தேசிய காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு வந்துள்ளது.
திமுகதான் நெத்தியடி தரும்
தமிழகத்தில், இன்றைய அரசியல் நிலவரப்படி, அ.இ.அ.தி.மு.க..வுக்கு, சரியான நெத்தியடி கொடுக்கும் அரசியல் சக்தி பெற்றுள்ள கட்சி தி.மு.க. தான். ஆளும் அ.இ.அ.தி.மு.க., ஜனநாயக மரபுகளை புறந்தள்ளி, எதேச்சதிகாரத்தின் வலை பின்னும் அரசை நடத்துகிறது. தமிழகத்திற்கே உரிய பாரம்பரிய ஜனநாயக அரசியல் நாகரீகப் பண்பாடுகளை மீண்டும் நிலைநிறுத்தி, நாட்டு மக்களை நாணயமான அரசியல் நாகரீக ராஜபாட்டையில் கொண்டு வருவதற்கு உள்ள ஒரே வழி, தமிழகத்தில் உள்ள ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமூக நீதிக் கொள்கைகளைப் பேணி வரும் அரசியல் கட்சிகள், இந்தத் தேர்தலில் ஒரே அணியில் ஒன்று திரள்வது தான் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலி யுறுத்தி வந்திருக்கிறது; இது நியாய உணர்வுமிக்கவர்களின் உள்ளங்களுக்கு மகிழ்ச்சியை, வரவேற்பைத் தந்திருக்கிறது.
முஸ்லிம் அமைப்புக்கள் ஆதரவு
தமிழக முஸ்லிம் சிறுபான்மை மக்கள், தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை இ.யூ. முஸ்லிம் லீக் தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறது. அதேபோன்று, இ.யூ. முஸ்லிம் லீகின் இந்த தேர்தல் அரசியல் அணுகுமறை ஆதரவு தெரிவிப்பது போன்று, தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளிக்க வில்லை என்றும், அதேசமயத் தில் அவரவர் விருப்பத்திற் கேற்றபடிதேர்தலில் வாக்களித் துக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருப்பது வர வேற்புக்குரிய ஒன்றாகும். அதைத் தொடர்ந்து தமிழக முஸ்லிம் அமைப்பு களில் பலவும் வெளிப்படை யாக தி.மு.க. கூட்டணிக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. அரசியல் ரீதியாக இயங்கி வரும் மனிதநேய மக்கள் கட்சி யும், எஸ்.டி.பி.ஐ. கட்சியும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, கூட்டணியில் இணைந்துள்ளன.
ஆதங்கம் எதற்கு?
மனிதநேய மக்கள் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் தரப்பட் டுள்ளன. இ.யூ. முஸ்லிம் லீகிற்கும் ஐந்து தொகுதிகள் ஒதுக்கியுள்ளனர். இ.யூ. முஸ்லிம் லீக் தோழர்கள் சிலர், எப்போதும் உள்ள இ.யூ. முஸ்லிம் லீகிற்கும் ஐந்து தொகுதிகள், நேற்று கூட்டணி யில் நுழைந்த மனிதநேய மக்கள் கட்சிக்கும் ஐந்து தொகுதிகளா? என்று ஆதங்கப் படுவது, அவர்களின் தொலை பேசி பேச்சுகளில் இருந்தும், முகநூலில் வெளியிடப்படும் கருத்துக்களில் இருந்தும் தெரிகிறது. இ.யூ. முஸ்லிம் லீகினரின் ஆதங்கம் நமக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது. இ.யூ. முஸ்லிம் லீக் தலைமையில் உள்ளவர்களும் மனிதர்கள்தாம்; மரக் கட்டைகள் அல்ல! ஆதங்கப்படுவதற்கு இப்போது அவசியமில்லை என்பதைத்தான் தோழர் களுக்கு தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
அழைத்தது இ.யூ.மு.லீக்
தி.மு.க.. அணிக்கு, ஜனநாயக, சமயச்சார்பற்ற, சமூகநீதிக் கொள்கைகளைப் பின்பற்றும் கட்சிகள் வர வேண்டும்; ஆதரவு தர வேண்டும் என்று அழைப்பு விடுத்தது இ.யூ. முஸ்லிம் லீக்தான்! சிறுபான்மை சமுதாய இயக்கங்கள், தி.மு.க. கூட்டணிக்கு நல்லாதரவு தர வேண்டும் என்று தொடர்ந்து அழைப்புக் கொடுத்து வந்ததும் இ.யூ. முஸ்லிம் லீக் தான்! தி.மு.க. கூட்டணியில், நாடாளுமன்றத் தேர்தலின்போது, புதுச்சேரி - தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் நான்கு தொகுதிகளை முஸ்லிம்களுக்குத் தர வேண்டும் என்று கூறியதும், அதைப் பெற்றுத்தந்து, நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளில் நான்கு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியதை வரவேற்று வாழ்த்துக் கூறியதும் இ.யூ. முஸ்லிம் லீக் தான்! அதே `ஃபார்முலா" தமிழக சட்டப் பேரவை தேர்தலிலும், புதுச்சேரி தேர்தலிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று ஓராண்டாகச் சொல்லி வரும் கட்சி இ.யூ. முஸ்லிம் லீக்தான்!
12 தொகுதிகள்...
தமிழகத்தில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு தி.மு.க. கூட்டணியில் குறைந்தபட்சம் பன்னிரண்டு தொகுதிகளும், புதுச்சேரியில் குறைந்தபட்சம் மூன்று தொகுதிகளும் ஒதுக்கப் பட வேண்டும் என்று தி.மு.க. தலைமைக்கும், கூட்டணி கட்சி களின் தலைமைகளுக்கும் கோரிக்கை வைத்ததும் இ.யூ. முஸ்லிம் லீக் தான்! சமுதாயத்தின் நலனை முன்னிலைப்படுத்தி, அரசியல் நடத்தும் கட்சி இ.யூ. முஸ்லிம் லீக் தான் என்பதை இன்றைக்கு சமுதாய மக்கள் நன்கறிந்திருக் கிறார்கள்.
பிரதிநிதித்துவ சபை
ஒட்டு மொத்த சமுதாயத்தின் கருத்தில், இ.யூ. முஸ்லிம் லீக் இன்றைக்கு தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதித்துவ சபை என்பது நிலை நாட்டப்பட்டிருக்கிறது. விழுப்புரத்தில் மார்ச் 10-ல் நடந்த மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தமிழக மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் இயக்கம் இ.யூ. முஸ்லிம் லீக் தான் என்பதற்கு அந்த மாநாடு ஓர் அழகிய அத்தாட்சியாக அமைந்தது. மாநாட்டில் இ.டி.ஏ. நிறு வனங்களின் தலைவர் - எழுபது ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ குடும்பங் களுக்கு வேலை வாய்ப்பை அரபு நாடுகளில் அளித்து உதவிய சமுதாயப் புரவலர் சையது எம். ஸலாஹுத்தீன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதை ஒவ்வொரு இ.யூ. முஸ்லிம் லீக் தோழரும் தங்களின் இதயங்களில் பொன் னெழுத்துக்களால் பொறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவர் என்ன சொன்னார்?
ஸ்லாஹூத்தீன் பேச்சு
இ.யூ. முஸ்லிம் லீகின் தலைவர் வெறுமனே ஓர் அரசியல் கட்சித் தலைவர் மட்டுமல்ல; ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் தலைவராகவும் இருக்கிறார் என்று சையது எம். ஸலா ஹுத்தீன் கூறியபோதும், அதேபோன்று இம் மாநாட்டில் சங்கைக்குரிய உலமா பெருமக்களின் குரலாக ஒலித்த தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மூத்த தலைவர் மௌலானா டி.ஜே.எம். ஸலா ஹுத்தீன் ரியாஜி அவர்களும் முஸ்லிம் லீக் நமது இயக்கம்; அதன் தலைவர் சமுதாயத்தின் தலைவர் என கூறியபோதும், மாநாட்டில் குழுமியிருந்த பல்லாயிரக் கணக்கான மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் தக்பீர் முழங்கி வரவேற்ற காட்சியை ஒவ்வொரு முஸ்லிம் லீகரும் மனத்திரையில் நிறுத்த வேண்டும்.
முஸ்லிம் இதயங்களில்..
முஸ்லிம் சமுதாயத்திற்கு நாங்கள்தான் தலைவர்கள் - நாங்கள்தாம் வழிகாட்டிகள் - நாங்கள்தாம் எஜமானர்கள் என்று யார் யாரோ உரக்கக் கூறி, உரிமை கொண்டாடி வந்த காலம் மறைந்து விட்டது; சமுதாயத்தின் பிரதிநிதித்துவ சபை இ.யூ. முஸ்லிம் லீக்தான் என்பது சமுதாய மக்களின் உள்ளங்களில் நிறைந்து விட்டது.! கண்டு கொள்ளப்படாததாக இருந்து வந்த இ.யூ. முஸ்லிம் லீகை இன்றைக்கு சமுதாய மக்கள் தங்களின் ‘கல்பு' (இதயங்)களில் ஏற்றிப் போற்றும் நிலை வந்திருப்பதை அறிந்து முஸ்லிம் லீகர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல வேண்டும்; ஆதங்கத்தைச் சொல்லிக் கொண்டு அலையக் கூடாது.
6 சதவீத முஸ்லிம் வாக்குகள்
தி.மு.க. கூட்டணியில், இ.யூ. முஸ்லிம் லீக் கோரியதை விட, தொகுதிகள் கூடுதலாகவே முஸ்லிம் சமுதாயத்திற்கு தரப் போகிறார்கள் என்பது இன்று யதார்த்தமாகி விட்டது. 5 சதவீத வாக்குகள் கூட இல்லாத அரசியல் கட்சிகளுக்கு 50 தொகுதிகள் என்று பேரம் பேசுகிறார்களே! 6 சதவீத வாக்குகள் உள்ள முஸ்லிம் சமுதாயம் ஓரணியில் இருந்தால் 60 தொகுதிகளை தருவதற்கு காலம் வருமல்லவா? என்று ஆதங்கப்பட்டவர்களின் இதயக்குரல் என்று பகிரங்கமாயிருக்கிறது என்பதன் அடை யாளமே சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இப்போது இருபது தொகுதிகளுக்கு மேலாக கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது! நாளைக்கொருநாள் தேர்தல் உடன்பாடு என்று வரும் போது, இப்போது வழங்கப்படும் தொகுதி எண்ணிக்கையே, முதல் கோரிக்கையாக மாறி விடும் என்பதை தோழர்கள் உணர வேண்டும்.
ஆதங்கம் வேண்டாம்
வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை அமோக மாக வெற்றி பெறச் செய்வதற்கு உரிய வழியை மட்டுமே சிந்திக் கும் நேரமிது! வேறு வேறு ஆதங்கம், ஆத்திரம், ஆவேசம் எதுவும் இன்றையத் தேவை இல்லை! கொதிக்கும் நீர் எப்போதும் கொதித்துக் கொண்டே இருந்தால், அது நரகத்தின் அடையாளம்! குவலயத்தில் வாழும் நமக்கு கொதிக்கும் நீர் குளிர்ந்து விடுவதுதான் யதார்த்தம்! அந்த யதார்த்த நிலைக்கு நாம் வர வேண்டும்! நமது உழைப்பு அனைத்தும் நமது கூட்டணியின் வெற்றி பற்றிய தாக இருக்க வேண்டும்!
நேற்றை விட இன்று
நன்றாகவே இருக்கிறது!
இன்றைவிட நாளை
மிக நன்றாகவே இருக்கும்! இதுதான் ஈமான்! ஈமான்
உள்ளவர்கள்தான் சீமான்!
சீமான்களே, எழுந்து நில்லுங்கள்! முன்னேறிச் செல்லுங்கள்! முழுமையாக வெல்லுங்கள்!
இவ்வாறு பேராசிரியர் கே..எம். காதர் மொகிதீன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.