கடும் வறட்சி.. நெல்லையில் மே 1 முதல் தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் கட்!
நெல்லை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் தாமிரபரணி நீரை நிறுத்துமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தொழிற்சாலைகளுக்கு தண்ணீரை நிறுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் வறண்டு விட்டன. இதனால் கங்கைகொண்டானில் உள்ள குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீரை நிறுத்த வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த நவம்பர் முதல் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க மதுரை ஹைகோர்ட் கிளை தடை விதித்தது. பின்னர் கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்த போது தடை விலக்கப்பட்டது. ஆனால் வறட்சி நிலவுவதால் ஏப் 30ம் தேதி வரை தண்ணீர் வழங்க கலெக்டர் தடை விதித்தார்.
இந்நிலையில் தற்போது குடிநீர் தேவைக்கே தண்ணீர் இல்லாததால் தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி தடை விதித்துள்ளது. மழை இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் வரும் மாதங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போதைய சூழ்நிலையில் குடிநீருக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாமிரபரணி தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு வழங்குவதை நிறுத்த தாமிரபரணி வடிநில கோட்ட பொறியாளர் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இதையடுத்து மதுரா கோட்ஸ், சன் பேப்பர் மில், இந்தியா சிமிண்ட், சர்வலெட்சுமி, சிப்காட், அர்ஜீனா பல்ப் மற்றும் பேப்பர், சேசாயி பேப்பர் மில்ஸ் ஆகியவற்றுக்கு தண்ணீர் மே மாதம் முதல் வழங்க கலெக்டர் தடை விதித்துள்ளார்.