திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தாலும், வராவிட்டாலும் கவலை இல்லை: வாகை சந்திரசேகர்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வந்தாலும், வராவிட்டாலும் கவலை இல்லை என்று திமுக சார்பில் நடந்த பிரச்சார கூட்டத்தில் நடிகர் வாகை சந்திரசேகர் தெரிவித்தார்.
சென்னை கூடுவாஞ்சேரியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கே.பி. ஜார்ஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில் நடிகர் வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
திமுக ஆட்சியே
வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் திமுக தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கப் போகிறது. இந்தியாவிலேயே 90 வயதிலும் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் ஒரே தலைவர் கருணாநிதி தான்.
ஜெயலலிதா
ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தை அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில் இருந்து துவங்கினார். ஆனால் அதற்கு முன்பு அண்ணாவின் வீட்டுக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு பிரச்சாரத்தை துவங்க மறந்துவிட்டார். அதிமுகவின் கொடியில் இருக்கும் அண்ணாவை ஜெயலலிதா மறந்துவிட்டார்.
கருணாநிதி
கருணாநிதி யாரைப் பார்த்து விரலைக் காட்டி இவர் பிரதமர், ஜனாதிபதி என்று கூறுகிறாரோ அவரால் தான் பிரதமராக, ஜனாதிபதியாக முடியும்.
கட்சி தொழில்
தற்போது கட்சி துவங்கியவர்கள் எல்லாம் பேரம் பேசிக் கொண்டு கட்சியை தொழிலாக செய்து வருகின்றனர். அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்யவில்லை.
சினிமா நடிகர்
சினிமா படத்தில் நடித்தவர் இன்று கட்சி துவங்கிவிட்டு நான் முதல்வர், பிரதமர், ஜனாதிபதி என்று கூறுகிறார். 50 வயதில் சினிமாவில் மார்கெட் போன பிறகு அரசியல் பக்கம் வருகிறார்கள். இனி அவர்கள் திமுக கூட்டணிக்கு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி நமக்கு கவலை இல்லை.
தா.பா., வைகோ
40 தொகுதிகளும் நமக்கே என்ற சூழல் நிலவுகிறது. மேடை ஏறி பேசினால் மட்டும் போதாது. ஒரு கொள்கை வேண்டும், தமிழன் என்ற உணர்வுடன் இருக்க வேண்டும். இதை எல்லாம் வைகோவும், தா. பாண்டியனும் மறந்துவிட்டு தேர்தலில் சீட்டுக்காக அல்லல்பட்டும், கெஞ்சியும், தற்போது மௌனமாக உள்ளார்கள். 2 பேர் பழத்திற்காக மரத்தடியில் படுத்திருக்கின்றனர்.
தோற்காத கருணாநிதி
உலகத்திலேயே தோல்வி அடையாத சட்டசபை உறுப்பினர் என்றால் அது கருணாநிதி மட்டுமே. டெசோ மாநாடு நடத்தி ஐ.நா. சபையை திரும்பிப் பார்க்க வைத்தவர் அவர். வரும் தேர்தலில் யார் வெற்றிப் பெறப் போவது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார் வாகை சந்திரசேகர்.