சேலம், குமரியில் மதுவிலக்கு தேவை: சசிபெருமாள் உறவினர்கள் நிபந்தனைகள்- உடலை பார்க்க அனுமதி மறுப்பு
சேலம்: கன்னியாகுமரி மற்றும் சேலம் மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமானால் சசிபெருமாளின் சடலத்தை பெற்றுக்கொள்வோம் என அவரது குடும்பத்தினர் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதனிடையே சசிபெருமாள் உடலைப் பார்வையிட அரசியல் கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குமரி மாவட்டம் உண்ணாமலைக்கடையில் நடந்த டாஸ்மாக்கடை எதிர்ப்பு போராட்டத்தில் மரணமடைந்த காந்தியவாதி சசிபெருமாளின் சடலம் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது சடலத்தை பெற்றுக்கொள்வதற்காக தொடர்ந்து அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஆனாலும் சடலத்தைப் பெற்றுக்கொள்ளாமல் கடந்த நான்கு நாட்களாக அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் சங்ககிரி ஆர்டிஓ பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் இரவு சசிபெருமாள் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். அப்போது குடும்பத்தினரிடம் தங்களது கோரிக்கையை ஒரு மனுவாக அரசுக்கு வழங்கும்படி கேட்டுக்கொண்டனர். இதையேற்றுக்கொண்டு அவர்கள் வழங்கிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நீதி விசாரணை தேவை
காந்தியவாதி சசிபெருமாளின் மரணத்தை தற்கொலை வழக்காக பதிவு செய்தது அவரின் தியாகத்தை கொச்சைப் படுத்துவதாக உள்ளது. ஆகவே நடந்த உண்மைச் சம்பவத்தை உலகம் அறிந்து கொள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
பூரண மதுவிலக்கு
பூரண மதுவிலக்கு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும். அறிவிப்பு வெளியான 6 மாதத்திற்குள் தமிழகத்திலுள்ள அனைத்து மதுக் கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும்.
சேலம், குமரியில் மதுவிலக்கு
முதற்கட்டமாக காந்தியவாதி சசிபெருமாள் பிறந்த சேலம் மாவட்டத்திலும், உயிர் நீர்த்த குமரி மாவட்டத்திலும் உள்ள பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை காந்தியவாதி சசிபெருமாள் உடலை பெற மாட்டோம் என்று உறுதியாக கூறுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உடலை பார்க்க அனுமதியில்லை
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சசிபெருமாள் உடலைப் பார்க்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு செவ்வாய்க்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது. இதேபோல காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ விஜயதாரணிக்கும் சசிபெருமாளின் உடலை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.
வருத்தமளிக்கிறது
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நல்லகண்ணு, சசிபெருமாள் எனது நீண்ட கால நண்பர். அவரது வீட்டில் நான் 23 நாள்கள் தங்கி இருந்தேன். அவர் எந்த நோக்கத்திற்காக போராடினாரோ, அந்தப் போராட்டத்தின்போதே உயிரிழந்தார். அவரது மறைவுக்கும், தியாகத்துக்கும் மதிப்பளிக்கும் வகையில் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலை பார்க்க அனுமதிக்காமல் என்னை திருப்பி அனுப்பியது வருத்தமளிக்கிறது என்று கூறிவிட்டு சென்றார்.