தூய தமிழை அழகாக உச்சரித்துப் பேசியவர் மனோரமா... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புகழாரம்
சென்னை: தூய தமிழில் வசனங்களை அழகுற பேசி நடித்து மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர் நடிகை மனோரமா. அவரது மறைவு தமிழ்த் திரையுலகுக்கு பேரிழப்பாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி:
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களிலும் 60 ஆண்டுகளில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நகைச்சுவை நடிகை மனோரமா அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிக்க துயரமும் வருத்தமும் அடைந்தேன்.
திரைப்படத்தின் வசனங்களை அழகான தூயத்தமிழில்; உச்சரிப்பதில் அவருக்கு இணை அவர் தான். நாகேஷ், மனோரமா இணைந்த நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியதை போல இனி எவராலும் இயலுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.
பெருந்தலைவர் காமாராஜர் மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர் மனோரமா. இவர் தம்முடைய கலைத்துறைப்பணிக்கு தொடக்ககாலத்தில் பேருதவியாக இருந்தவர் கவிஞர் கண்ணதாசன் என்று பலமுறை நன்றியோடு நினைவுக்கூர்ந்து இருக்கிறார்.
தமிழ் திரைப்படத்துறையை பொறுத்த வரை மனோரமாவின் இழப்பை எவராலும் ஈடுசெய்ய முடியாத வகையில் பெரும் இழப்பாகும். அவரது மறைவால் வாடும் திரையுலக நண்பர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அவர்.