தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு யாரும் தடை போட முடியாது - கார்த்திக்
மதுரை: தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு யாரும் தடை போட முடியாது என அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் பொது மக்கள் 3வது நாளாக தொடர்ந்து வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் கருப்பு கொடி ஏந்தியும், ஜல்லிக்கட்டு மாடுகளுடன் மாடு பிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அருகே இரண்டு பேர் மண்ணெண்ணெய் கேன்களுடன் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுப்டடனர். இதையடுத்த தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பேச்சவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான கார்த்திக் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அலங்காநல்லூரில் அனுமதியை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இன்று நான் அலங்காநல்லூர் செல்வதை காவல் துறையினர் தடுத்தால் கைதாகவும் தயாராக இருப்பதாகவும் தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு யாரும் தடை போட முடியாது எனவும் கார்த்திக் தெரிவித்தார்.
நாடாளும் மக்கள் கட்சி சார்பில் கடந்த 10 ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கார்த்திக் இன்று அலங்காநல்லூர் செல்ல இருப்பதால் பரபரப்பு நிலவுகிறது.