நாங்கள் இந்தியாவில்தான் இருக்கோமா... சந்தேகமா இருக்கு.. கொதித்தெழுந்த நொச்சிக் குப்பம் மீனவர்
ராமேஸ்வர மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நொச்சிக் குப்பம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும் என்று நொச்சிக் குப்பம் மீனவர் கோரியுள்ளனர்.
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டத்தைக் கண்டித்து மயிலாப்பூர் நொச்சிக் குப்ப மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நொச்சிக் குப்பம் மீனவ சங்கத்தின் செயலாளர் ருபேஷ் கூறியதாவது: தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு மீனவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இலங்கை அரசு இப்படி அட்டூழியம் செய்து வருகிறது. ஆனால் இந்திய அரசு இதனை கண்டு கொள்வதாக தெரியவில்லை.
குடிமக்களின் சந்தேகம்
பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த நல்ல முடிவையும் இந்திய அரசால் தமிழக மீனவர்களுக்கு கொடுக்க முடியவில்லை. இதனால் இந்தியாவில்தான் இருக்கின்றோமா என்ற கேள்வி தமிழக மீனவர்கள் மத்தியில் எழுகிறது.
முற்றுகைப் போராட்டம்
தமிழகம் முழுவதும் இருக்கின்ற மீனவ கிராமங்களை ஒன்று திரட்டி தமிழகத்தில் உள்ள 5 வர்த்தக துறைமுகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போகிறோம். வருமானம் வரும் விஷயத்தில் கையை வைத்தால்தான் இந்திய அரசு இதில் கவனம் கொள்ளும் என்று நாங்கள் கருதுகிறோம்.
இழப்பீடு
சுட்டுக் கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் வயதை கணக்கில் கொண்டு அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். குண்டடிப்பட்டு படுகாயம் அடைந்துள்ளவருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.
போர் தொடுக்க..
தமிழக மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை வீரரை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும். தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் நிலையில் இலங்கை மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும்.
துப்பாக்கி பயிற்சி
மீனவர்களுக்கு அரசு துப்பாக்கி வழங்கி அதற்கான பயிற்சியையும் அளிக்க வேண்டும் என்று ருபேஷ் கூறினார். தொடர்ந்து இலங்கை அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.