களை கட்டுகிறது ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்.. மனுத் தாக்கல் செய்தார் டிராபிக் ராமசாமி!
சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. சமூக சேவகர் டிராபிக் ராமசாமி இன்று பிற்பகல் அங்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தார். நிச்சயம் நான் வெல்வேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் ராமசாமி.
முதல்வர் ஜெயலலிதா இங்கு வெள்ளிக்கிழமையன்று மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா போட்டியிடுவதற்கு வசதியாகவே இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து உடனடியாக இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது.
அதன்படி ஜூன் 27ம் தேதி இங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியது. ADVERTISEMENT மனுக்களை வருகிற 10ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். அதன் பின்னர் 11ம் தேதி மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மனுக்களை வாபஸ் பெற 13ம் தேதி கடைசி நாளாகும். 27ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். 30ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
இந்தத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக சவுரிராஜன் செயல்படுவார். தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகம் 4-ல் தேர்தல் அதிகாரி சவுரிராஜனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். முதல்வர் ஜெயலலிதா 5ம் தேதி மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது. அவர் அனேகமாக தண்டையார்பேட்டை வராமல், மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் போய் மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ரிப்பன் மாளிகையில் ஒரு ஹால் அதி வேகமாக தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சுயேச்சைகள் சிலர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அவர்களில் முக்கியமானவர் டிராபிக் ராமசாமி. இவர் தனது ஆதரவாளர்களோடு வந்து மனுத் தாக்கல் செய்தார். பல்வேறு கட்சிகளிடம் ராமசாமி ஆதரவு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தவிர 169வது முறையாக தேர்தலில் போட்டியிடும் பத்மராஜன், பிஸ்மில்லா மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் அகமது ஷாஜகான், வாழ்வா சாவா என்ற கட்சியின் தலைவர் சுரேஷ் உள்ளிட்டோரும் மனுத் தாக்கல் செய்தனர்.