நியமனப் பொதுச் செயலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை.. ஓபிஎஸ் தடாலடி!
அதிமுகவில் நியமனப் பொதுச் செயலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக சட்டவிதிகள்படி நியமனப் பொதுச் செயலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா வெளியே சென்று வரும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சசிகலாவிற்கு எந்தவித சலுகையும் சிறையில் அளிக்கப்படவில்லை. இந்த வீடியோ பொய் என நாங்கள் நிரூபிப்போம் என்று புகழேந்தி கூறியுள்ளார். இதனிடையே சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும். சசிகலாவுக்கு உதவிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கீரின்வேவ்ஸ் சாலையிலுள்ள பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நீலகிரி மாவட்ட படுகர் இன மக்கள் இன்று வந்திருந்தனர். அப்போது ஓபிஎஸ்க்கு ஆதரவு அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், அதிமுகவின் சட்டவிதிகள்படி பொதுச்செயலாளர் இல்லாத அசாதாரணமான சூழலில், அவைத்தலைவர், பொருளாளர், தலைமை நிலையச் செயலாளர் ஆகியோர் கட்சியை வழிநடத்தலாம் எனவும் நியமனப் பொதுச் செயலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் அவர் கூறினார்.
மேலும் பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, விசாரணை கமிஷன் அறிக்கை அளித்த பின்னர் எனது கருத்தை தெரிவிக்கிறேன் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
முன்னதாக அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தற்காலிகமாகவே தேர்வு செய்யப்பட்டார். எனவே அப்பதவியானது கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்தே தேர்வு செய்ய வேண்டும் என்பதால் சசிகலாவின் நியமனம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி மைத்ரேயன் எம்.பி. தலைமையில் பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.