ரூ.19.22 கோடி மோசடி வழக்கு: சுகேசுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனரா வங்கிக்கு ரூ.19.22 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சுகேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அம்பத்தூர் கனரா வங்கியில் சுகேஷ் தனது நிறுவனத்திற்கு ரூ.19.22 கோடி அளவுக்கு கடன் வாங்கி கொண்டு திருப்பி செலுத்தவில்லை என சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதில் அவர் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கில் சம்மன் அனுப்பியும் சுகேஷ் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஜூன் 9 ம் தேதி சுகேஷை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் சுகேஷ் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுகேஷ்க்கு மோசடி வழக்கில் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.