விஜயகாந்த் என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை: சொல்கிறார் சரத்குமார்
நாமக்கல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை என சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.ஆர். சுந்தரத்திற்கு ஆதரவாக சமக தலைவர் சரத்குமார் பிரச்சாரம் செய்தார்.
நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,
மத்திய அரசு
மத்திய அரசு மாநில அரசுகளை மதிக்க வேண்டும். அப்போது தான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இதை செய்ய தவறிவிட்டது.
ஜெயலலிதா
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆகும் போது இந்தியாவின் பொருளாதாரம் மேம்படும்.
வாக்குறுதிகள்
ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அளித்த 177 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அதிமுக அறிக்கையில் மத்திய அரசு என்றால் அது எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
கூட்டணிகள்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக பல கூட்டணிகள் அமைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் பங்கு கொண்டு பதவி சுகத்தை அனுபவித்த திமுக தமிழகத்தை வஞ்சித்துவிட்டது. மற்றொரு கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். அந்த சந்தர்ப்பவாத கூட்டணியில் இருக்கும் தேமுதிக மத்தியில் வீசும் அலையில் பெற்றி பெறலாம் என்று நினைக்கிறது.
விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை. அவர் தனது மைத்துனர் சுதீஷையும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியையும் மத்திய அமைச்சராக்க பிரச்சாரம் செய்கிறார்கள். அதற்காக அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம்.
இளைஞர்கள்
இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. நம் நாட்டு இளைஞர்களை வழிநடத்த தகுதியானவர் முதல்வர் ஜெயலலிதா. அதனால் நாற்பதும் நமதே என்பதுவே நம் இலக்காக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு
ஜெயலலிதா தமிழகத்தை சிறப்பாக ஆண்டு வருகிறார். மக்களுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்து பாராட்டு பெறுகிறார். இந்தியாவிலேயே அதிக மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலம் தமிழகம்.
மின்வெட்டு
எதிர்க்கட்சியினரோ செயற்கையாக மின்வெட்டு பிரச்சனையை உருவாக்கி அதிமுக அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க நினைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களின் சதியை ஜெயலலிதா முறியடிப்பார் என்றார் சரத்குமார்.