சத்துணவு ஊழியர் பணிக்கு தாராளமாக நடக்கும் வசூல் வேட்டை.. பெண்கள் அதிர்ச்சி
அரசு பணியிடங்களுக்கு தாறுமாறாக வசூல் வேட்டை தூத்துக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடத்திற்கு வசூல் வேட்டை நடப்பதால் பெண்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 70 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 310 சமையல் உதவியாளர் பணியிடம் காலியாக இருந்து வருகின்றன. இந்த இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்காக விண்ணப்பம் பெறும் பணிகள் முடிவடைந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு 9,922 பேரும், சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு 2,868 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் கடந்த சில நாட்களாக ஓன்றிய அலுவலகங்களில் நடந்து வந்தது.
சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு 221 பேர் நிராகரிக்கப்பட்டு 9,701 பேர் மட்டுமே தேர்வாகினர். சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு 482 பேர் நிராகரிக்கப்பட்டு 2,386பேர் தேர்வாகினர். இவர்களுக்கான நேர்முக தேர்வு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி வரும் 25ம் தேதி அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது. பொதுவாக சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடத்திற்கு விதவைகள், கணவரால் கை விடப்பட்டவர்கள், மாற்று திறனாளிகள் என்ற அடிப்படையிலும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை அடிப்படையிலும் நிரப்பப்படும்.
இந்நிலையில், இந்த பணியிடத்திற்கு ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் பணம் தந்தால் வேலை உறுதி என்று பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது. சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு ரூ.3 லட்சமும், உதவியாளர் பணியிடத்திற்கு ரூ.75 ஆயிரமும் பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பெண்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.