தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் முடங்கிய இணைய சேவை.. இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு
3 மாவட்டங்களில் இணைய சேவை முடங்கியதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு பெரும் கொந்தளிப்பான நிலை நீடித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து வரும் 27-ந் தேதி வரை தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. வன்முறை பரவாமல் இருக்கவே இணைய சேவை முடக்கம் என அரசு தரப்பு கூறுகிறது.
மாணவர்கள் தவிப்பு
ஆனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் அண்ணா பல்கலைக் கழக பொறியியல் படிப்புகளுக்காக கலந்தாய்வு மையங்களில் விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் திணறி வருகின்றனர்.
பணம் எடுக்க முடியாத நிலை
10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. இணைய சேவை இல்லாததால் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
செய்தியாளர்கள் அவதி
தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி, நெல்லை மாவட்ட செய்தியாளர்கள் விருதுநகர் மாவட்டத்துக்கு சென்று செய்திகளை அனுப்ப வேண்டிய நிலை உள்ளது.
முன்பதிவுகள் முடக்கம்
ரயில், பேருந்து பயணங்களுக்கு முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் இயங்கும் கால்சென்டர்களும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் உடனடியாக இணைய சேவை முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.