பருவமழையை எதிர்கொள்வது எப்படி? அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் ஆலோசனை
சென்னை: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை கண்டறியப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் ஆய்வு கூட்டம் சென்னையில் சென்னையில் உள்ள ப்பன் மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை கண்டறியப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மாவட்ட ரீதியான ஆய்வு
வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரிடர் பணிகளை கண்காணிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாவட்ட, தாலுகா அளவில் குழுக்களை ஒருங்கிணைந்து செயல்படுத்துவார். அரசின் அனைத்து துறைகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனை உள்பட கட்டிடங்களுக்குள் வெள்ளம் புகுந்தால், மக்களை காப்பாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த திட்டத்தை உருவாக்கிக் கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். மாவட்ட ரீதியான ஆய்வு கூட்டத்தையும் நடத்தியுள்ளோம்.
கடலூரில் கண்காணிப்பு
வடகிழக்கு பருவமழையால் கடந்த ஆண்டு அதிகம் பாதிக்கப்பட்ட கடலூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆய்வு செய்தார் அமைச்சர் உதயகுமார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவமாகக் கொண்டு, பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளதாக 274 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகள் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மண்டல அளவில் கண்காணிக்க 4 மாவட்ட வருவாய் அலுவலர்களும், வட்டார அளவில் துணை ஆட்சியர் தலைமையில் 14 குழுக்களும், நகராட்சி ஆணையர் தலைமையில் 5 குழுக்களும், பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் 16 குழுக்களும், வட்டாட்சியர் தலைமையில் 32 குழுக்களும், கிராம அளவில் 274 குழுக்களும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறினார்.
தயார் நிலையில் படகுகள்
இக்குழுவினருக்கு உடனடி மீட்பு நடவடிக்கை குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், முதலில் உதவி அளிக்க முன்வரும் சுமார் 274 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. 50 படகுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோருக்கும் போதுமான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றும் உதயகுமார் தெரிவித்தார்
பேரிடர் தொலைபேசி எண்
பேரிடர் காலங்களில் மக்கள் சுலபமாக தொடர்புகொள்வதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவசரகால தொலைபேசி எண் 04142-220700 பயன்பாட்டில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் பருவ மழையை எதிர்கொள்ள தயாராக உள்ளது என்றும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் சேமிப்பு
வெள்ளபாதிப்பு ஏற்பட்டால் கடலோர காவல்படை, மத்திய பேரிடர் மீட்பு குழு, மத்திய பாதுகாப்பு படை உதவிகளை விரைந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளபாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லவும் அதனை பாதுகாத்து வைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொலை தொடர்பு பாதிப்பு
கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது தொலைதொடர்புக்கு ஏற்பட்ட பாதிப்பு இந்த முறை நடக்கக் கூடாது என்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் தொலைதொடர்பு தனியார் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். செல்போன் டவர்கள் தாழ்வான இடங்களில் இருந்து வேறிடங்களுக்கு மாற்றப்படுகின்றன. மக்களை மீட்கும் படகுகளுடன் தயாராக இருக்க மீனவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.