வடகிழக்கு பருவமழைக்கான சூழல் மாறியுள்ளது.. தொடங்க லேட் ஆகும்- சென்னை வானிலை மையம்!
வடகிழக்கு பருவமழை தொடங்க தாமதம் ஆகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க தாமதம் ஆகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு எப்போதும் அதிக மழை பொழிவை தருவதும் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை போக்குவதும் வடகிழக்கு பருவமழைதான். இதனால் வடகிழக்கு பருவமழை குறித்த எதிர்பார்ப்பு எப்போதும் தமிழக மக்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யாததால் பல பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. வறட்சியின் காரணமாக விவசாயம் பொய்த்து போனது.
ஏற்கனவே அறிவிப்பு
இந்நிலையில் இந்த ஆண்டு எப்போது பருவமழை தொடங்கும் என காத்திருக்கின்றனர் தமிழக விவசாயிகளும் பொதுமக்களும். கடந்த 29ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை விலகி அன்றைய தினமே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்தது.
இன்றுமுதல் தொடங்கும்
ஆனால் வடகிழக்கு பருவமழை தொடங்கவில்லை. இந்நிலையில் வட இந்திய பகுதிகளில் தென் மேற்கு பருவமழை முற்றிலும் விலகி இன்றுமுதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் எனசென்னை வானிலை மையம் அறிவித்தது.
தாமதமாகும்
இதுகுறித்து இன்று அறிவிப்பு வெளியிட்ட இந்திய வானிலை மையம் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் வடகிழக்கு பருவமழை தொடங்க தாமதமாகும் என கூறியுள்ளார்.
இரண்டு புயல்கள்
அவர் கூறியதாவது, அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் மற்றும் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ளதாலும் அரபிக்கடல், தென்னிந்திய கடற்பகுதி, வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் திசை மற்றும் ஈரப்பதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
புயல் போன பிறகே
இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் மாறியுள்ளது. இந்த இரு புயல்களும் கரையை கடந்த பின்னரே வடகிழக்கு பருவமழை தொடங்கும். வடகிழக்கு பருவமழை தொடங்க ஒருவாரம் கூட ஆகலாம். இவ்வாறு சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.