மனசாட்சியே இல்லையா.. மன நலம் பாதித்த வடமாநில இளைஞரை மின்கம்பத்தில் கட்டி உதைத்த மக்கள்!
வடமாநில இளைஞரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
சேலம்: மனித உரிமைகளையும் விலைமதிப்பில்லாத உயிர்களையும் மதிக்காதவர்கள் யாராக இருந்தாலும், எந்த செயலாக இருந்தாலும் அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அது நம்மோடு வாழ்ந்து வரும் பொதுமக்களே ஆனாலும் சரி.
ஓமலூர் அருகே தட்டாஞ்சாவடி என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று மாலை ஒரு வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் சுற்றி வந்துள்ளார். இதனால் அவரை கூப்பிட்டு அப்பகுதி மக்கள் விசாரித்தபோது, அவர் இந்தியில் பேசியுள்ளார். அடுத்த கணம் பார்க்கணுமே, இதனால் அவர் குழந்தையை கடத்த வந்திருப்பாரோ என்ற நினைத்து, ஒட்டுமொத்த ஊரே ஒன்று திரண்டது. உருட்டுக் கட்டையுடன் வந்து அந்த நபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து வெளுத்து வாங்கியுள்ளனர்.
தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அந்த நபரை மீட்டு விசாரணைக்காக சூரமங்கலம் காவல் நிலையம் அழைத்து சென்றார்கள். விசாரணையில், அவரது பெயர் பாபு என்பது மட்டும் தெரிந்துள்ளது. ஆனால் அப்போதுதான் புரிந்தது அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது. இதையடுத்து அவருக்கு போலீசாரே சென்னைக்கு ரயில் டிக்கெட் எடுத்து கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.
ஊராகட்டும், கிராமமாகட்டும், எந்த மூலை முடுக்காட்டும், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற பெயர் எடுத்த ஊர் இன்று யாரை பார்த்தாலும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து வரும் வேதனை உள்ளது. அதற்கு காரணம் யார் மீதும் நம்பிக்கை இன்மை என்ற மனநிலைக்கு தள்ளபட்டுள்ளோம் என்பதுதான். வடமாநில இளைஞர்கள் பெரும்பாலானோர் நம் மாநில குழந்தைகளை கடத்தியதும், கடத்தி கொண்டிருப்பதும் நடந்துள்ளதை மறுக்க முடியாதுதான்.
ஆனால் குழந்தையை கடத்துபவராக அந்த நபர்கள் இருக்குமோ என்ற சந்தேகம் துளி வந்தாலும், அவர்களை பிடித்து வைத்துக்கொண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர பொதுமக்கள், தாங்களே தண்டனை தருவதை எந்த ரூபத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒட்டுமொத்தமாக கூட்டமாக, ஊராக, கிராமமாக என திரண்டு செய்தாலும் அது தவறுதான். உறுதி இல்லாமல் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி, அந்நபர் உயிரிழக்க நேரிட்டால் அனைவர் மீதும் கொலைவழக்கு தான் பதிய செய்ய நேரிடும்.
தமிழக அரசும், காவல்துறையும் இது சம்பந்தமான விழிப்புணர்வு அறிவிப்பினை தொடந்து வலியுறுத்த வேண்டும். வடமாநிலத்தவர்கள் குழந்தையை கடத்த வந்தவர்கள் என்று தெரிந்தாலோ தெரியாவிட்டாலோ என்னவிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு தெளிவாக விளக்க முன்வரவேண்டும்,
பொதுவாக இத்தகைய தாக்குதலுக்கு ஆளாவது எல்லாமே வடமாநில இளைஞர்கள், திருநங்கைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்தான். தங்களையே கவத்துக் கொள்ள இயலாத நிலையில் உள்ள இவர்களா திட்டம் போட்டு குழந்தையை கடத்துவார்கள் என்கிற யதார்த்தத்தை உருட்டு கட்டையை தூக்கும்முன் பொதுமக்கள் சிந்தித்து பார்க்க வேண்டாமா?