'குழந்தைச்சாமியும்' அவரின் கொடூரக் கொலைகளும்!
சென்னை: குழந்தை முகத்தில் ஒரு கொடூரன்.. என்ற வார்த்தை பக்காவாக பொருந்திப்போவது வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்-க்கு மட்டுமே.
பார்க்க பன்னு மாதிரி கன்னம், குழந்தை தனமாக குண்டு உடல்வாகு, கபடமற்ற சிரிப்பு என அக்மார்க் குழந்தையாகவே காட்சியளிக்கும் இந்த நபரின் உள்ளே குவிந்து கிடக்கிறது கொடூரம்.
கிம்மின் சர்வாதிகார தந்தை செய்த கொலைகளைவிட, கிம் ஜோன் உன் செய்த கொலைகள் 7 மடங்கு அதிகம் என்று பீதியுடன் கூறுகிறார்கள் வட கொரிய மக்கள். 32 வயதான கிம் கடந்த 2011ம் ஆண்டு தனது தந்தை கிம் ஜாங் இல் செத்துப் போன பிறகு பதவிக்கு வந்தார்.
ராணுவம், அரசுத்துறை, குடும்பத்தார் என யாராக இருந்தாலும் விட்டதில்லை கிம். பிடிக்கவில்லை என்றால் கொன்று ஓய்த்துவிடுவார். உதாரணத்திற்கு சில கொடூர கொலைகளை பாருங்கள்.
ராணுவ துணை அமைச்சர்
ராணுவ துணை அமைச்சராக இருந்த கிம் சோல், 2012 ஜனவரியில் பீரங்கியை வைத்து சுட்டு கொல்லப்பட்டார். செய்த குற்றம்-அதிபரை அவமரியாதை செய்ததாம். ராணுவ அமைச்சர் கிம் ஜோங் காக், அதே ஆண்டு மே மாதம், கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட விதமும், காரணமும் இன்னும் வெளியாகவில்லை.
பீரங்கியால்
பாதுகாப்பு துறை துணை அமைச்சர் கிம் யோங் சன், 2012 மே மாதம், பீரங்கியால் சுட்டு கொல்லப்பட்டார். காரணம் தெரியவில்லை. ராணுவ தளபதி ரி யோங் ஹோ, 2012 ஜூலையில் ராணுவத்தாரால் சுட்டு கொல்லப்பட்டார்.
ராணுவ தளபதி சுட்டு கொலை
கைது செய்ய அதிபர் உத்தரவிட்ட நிலையில், அதை தவிர்க்க தளபதி துப்பாக்கியை பிரயோகிக்க பதிலுக்கு ராணுவமும் துப்பாக்கியால் சுட்டு கொன்றது. குற்றம் என்னவென கூறப்படவில்லை.
விமானப்படை தளபதி
விமானப்படை தளபதி ரி பையோங்-சோல் 2014, ஆகஸ்ட் மாதம், கொல்லப்பட்டார். குற்றமும், கொல்லப்பட்ட விதமும் தெரிவிக்கப்படவில்லை.
பாதுகாப்பு துறை அமைச்சர் ஹையோங் யோங் சோல் கடந்த ஆண்டு மே மாதம், விமானத்தை வீழ்த்த பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். தலைமைக்கு விரோதமாக செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
விஷம்
கிம் கையோங் ஹுய் என்ற கிம்மின் உறவுக்கார பெண்மணி, 2014 மே மாதம் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். அவரது கணவரை கிம் கொன்றதை புகார் கூறியதற்காக இந்த தண்டனையாகும். 2012ல் சொந்த தாய் மாமனையும் கொன்றவர் கிம். கடந்த மாதம், கிம்மின் உத்தரவை செயல்படுத்தாத இரண்டு அரசு அதிகாரிகளை நிற்க வைத்து விமான எதிர்ப்பு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
100 பேர்
இதேபோல, அதிபரை அவமதிக்கும் வகையில் உட்கார்ந்திருந்ததாக வடகொரியாவின் துணைப்பிரதமர் கிம் யாங் ஜின் தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு சுமார் 100 பேரை இதுவரை கொடூரமாக கொன்றுள்ளார் கிம்.