அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. வடகிழக்கு பருவமழை பற்றி சூப்பர் தகவல்
சென்னை: அக்டோபர் 17ம் தேதி வட கிழக்கு பருவ மழை துவங்க வாய்ப்பு இருப்பதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேநேரம் வேலூர், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், பெரம்பலூர் , அரியலூர், தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பச்சலனத்தால் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வந்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது இதனிடையே வரும் அக்டோபர் 17ம்தேதி தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் மேகமூட்டத்துடன் இருக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் சில இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை) அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் 13 செ-மீ மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டம் சங்கரி துர்க்கத்தில் மற்றும் ஈரோடு மாவட்டம் பவானியில், மற்றும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் 5 செ.மீ மற்றும் பவானிசாகரில் 6 செ.மீ மழையும் பெய்துள்ளதாக பதிவாகி உள்ளது.