தமிழக உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யுமாம்.. சென்னையில்?
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென், வட தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வளி மண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாக தென், வட தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்த கத்திரி வெயில் கடந்த 28ஆம் தேதி விடைபெற்றது. இதைத்தொடர்ந்து தென் மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
இதன்காரணமாக வெயில் தணிந்தது. தென் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களை சுற்றி தொடர்ந்து மழை பெய்து வருவதால் இதமான சூழல் நிலவி வருகிறது.
தாளிக்கும் வெயில்
அதேநேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல இடங்களிலும் வட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால் சென்னையில் மட்டும் கடந்த 4 நாட்களாக வெயில் தாளித்து வருகிறது.
குளிர்ச்சியான காற்று
இந்நிலையில் நேற்று மாலை முதல் அவ்வப்போது மேகங்கள் திரண்டு குளிர்ச்சியான காற்று வீசி வருகிறது. இன்றும் வெயில் அந்தளவுக்கு இல்லை.
மழை பெய்ய வாய்ப்பு
இந்நிலையில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், வட மற்றும் தென் மாவட்டங்கள், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேகமூட்டம்
உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தக்கலை, குளச்சல்
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தக்கலை, குளச்சலில் தலா 7 செ.மீ., காஞ்சிபுரத்தில் 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு