தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை குறைவா பெய்திருக்கு தெரியுமா?
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட குறைவாக பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட குறைவாக பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தருவிக்கும் வடகிழக்குப் பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் பெய்யும். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது.
ஒரு வாரம் தாமதமாக தொடங்கிய பருவமழை இயல்பைவிட அதிகமாகவே இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தமிழகத்தில் மழை பெய்யவில்லை.
வடகிழக்குப்பருவ மழை நிறைவு
இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் வடகிழக்கு பருவமழை முடிவடைந்துவிட்டதாக தெரிவித்தார். தமிழகத்தில் 2017 அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை 40 செ.மீ. பெய்துள்ளதாக அவர் கூறினார்.
11 மாவட்டங்களில் குறைவு
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் 20 முதல் 40 சதவீதம் வரை மழை குறைவாக பெய்துள்ளதாக அவர் தெரிவித்தார். புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, கோவை மாவட்டங்களில் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் மழை குறைவாக பெய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
நாகையில் அதிகம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 49 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது என்றும் அவர் கூறினார். நெல்லை, குமரி, நாகையில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் 5% அதிகம்
நெல்லை மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. சென்னையில் 2017ஆம் ஆண்டில் 137 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவு 132 சென்டி மீட்டரைவிட 5 சதவீதம் அதிகம் என்றும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
தென்மேற்கு பருவமழை அதிகம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையை பொறுத்துவரை இயல்பை விட 9 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் தென் மேற்கு பருவமழை 29 சதவீதம் அதிகம் பெய்திருப்பதாகவும் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.