தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 9% குறைவாம்.. சொல்கிறது வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு 9 சதவீதம் குறைவாக பெய்திருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு 9 சதவீதம் குறைவாக பெய்திருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் வடகிழக்குப் பருவமழை தொங்கியது. அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்க வேண்டிய வடகிழக்குப் பருவமழை ஒரு வாரம் தாமதமாக அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கியது.
தொடக்கத்தில் அடித்து ஆட ஆரம்பித்த மழை பின்னர் குறைய தொடங்கிவிட்டது. பின்னர் வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் தென் தமிழகம் ஓரளவுக்கு மழையை பெற்றது.
தலையெடுக்கும் தண்ணீர்பஞ்சம்
ஆனாலும் வட தமிழகம் உட்பட உள்மாவட்டங்களில் போதுமான அளவு மழை பெய்யவில்லை. இதனால் உள்மாவட்டகளில் தற்போதே தண்ணீர் பஞ்சம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது.
இயல்பைவிட குறைவு
தற்போது தமிழகம் முழுவதும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு இயல்பான அளவைவிட 9 சதவீதம் குறைவாக பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்தளவு மழை
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 89 சதவீதம் முதல் 110 சதவீதம் வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பரில் மொத்தமாக 44 செ.மீ. மழை பெய்ய வேண்டும்.
9 சதவீதம் குறைவு
ஆனால் 2017-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 9 சதவீதம் குறைவாகவே பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலத்தடி நீர் குறைவு
தமிழகத்தில் இயல்பை விட குறைவாக மழை பெய்தாலும் அண்டை மாநிலங்களில் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக பெரும்பாலான ஏரிகள் குளங்களில் தண்ணீர் இருப்பதும் நிலத்தடி நீர் உயர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.