தமிழகத்தில் ஒருவாரம் லேட்டாக பெய்யுமாம் ”வடகிழக்கு பருவமழை”- சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கத்தை விட ஒரு வாரம் தள்ளிப்போகிறது என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தமிழ்நாடு தவிர பெரும்பாலான மாநிலங்களில் அதிக மழையை கொடுக்க வல்லது தென்மேற்கு பருவமழைதான். தென் மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்நிலையில் தென் மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் முடிந்துவிட்டது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி சராசரியாக தொடங்கும். ஆனால் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 31 ஆம் தேதி வரை பெய்யும் மழை அளவு அனைத்தும் வடகிழக்கு பருவமழையை குறிக்கும். சில வருடங்களில் வடகிழக்கு பருவமழை ஜனவரி 5 ஆம் தேதி வரை நீடிக்கும்.
போதிய மழை இல்லை:
கடந்த 2 வருடங்களாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவுக்கு பெய்யவில்லை. எனவே இந்த வருடமாவது போதிய மழை பெய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வடகிழக்கு பருவமழை லேட் ஆகுமாம்:
தென் மேற்கு பருவமழை சராசரியாக 32 செ.மீ பெய்யவேண்டும். ஆனால் இந்த வருடம் 28.5 செ.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி சராசரியாக தொடங்கும். ஆனால் 20 ஆம் தேதி கடந்துவிட்டது. ஆனால் வடகிழக்கு பருவமழை தொடங்குவது பற்றிய அறிகுறியே தெரியவில்லை.
கடலோர மாவட்டங்களில் மழை:
இதுகுறித்து சென்னையை சேர்ந்த வானிலை அதிகாரிகள், "வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் சராசரியாக 43 செ.மீ. பெய்யவேண்டும். சென்னையில் 85 செ.மீ. மழை பெய்யவேண்டும்.வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என்றால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும்.
3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை:
இப்போதைக்கு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பே இல்லை. இன்னும் ஒருவாரம் தள்ளிப்போய்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலை உள்ளது. அடுத்து 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்ய உள்ளது. அடுத்து வடமாவட்டங்களில் வறண்ட வானிலைதான் நிலவும்" என்று தெரிவித்துள்ளனர்.