தமிழர்கள் பிரச்சினை தீர, மக்கள் நாடு திரும்ப நரசிம்மரை வேண்டிய வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன்
கீழப்பாவூர் நரசிம்மரை வழிபட்ட இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்கேஷ்வரன் பிரச்சினைகள் தீரவும், அரசியல் சிக்கல்கள் நீங்கவும் தியானம் செய்து வேண்டிக்கொண்டார்.
Recommended Video
நெல்லை: தமிழகம் வந்த இலங்கை வடக்கு மாகாண முதல்வரான விக்னேஷ்வரன் நேற்று நரசிம்மர் கோயிலுக்கு சென்று இலங்கை தமிழர்களின் பிரச்சினை தீர வழிபட்டார். கோவிலில் அமர்ந்து தியானம் செய்தார். முதல்வர் விக்னேஷ்வரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சித்திரை திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் குறும்பலா மூலிகை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நூல் வெளியீட்டு விழா, தயாரிப்புகள் அறிமுக விழா நடந்தது. இதில் இலங்கை வடக்கு மாகாணம் முதல்வர் நீதிபதி விக்னேஷ்வரன் பங்கேற்றார்.
குற்றாலத்தில் நடந்த விழாவில் பேசிய முதல்வர் விக்னேஷ்வரன்,வடகிழக்கு மாகாண தமிழ் மீனவர்களை தொழில் செய்யவிடாமல் சிங்கள மக்கள் தடை விதித்து வருகின்றனர். எங்களுடைய மக்கள் திரும்பி வர வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாகும். பல லட்சம் பேர் தமிழர்கள் வாழ்ந்து வந்த நிலையில், படிப்படியாக எண்ணிக்கை குறைந்து வருகிறது. பல்வேறு வெளிநாடுகள் மட்டுமின்றி, இந்தியாவிலும் ஒரு லட்சம் தமிழர்கள் இருந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் மாகாணத்திற்கு திரும்ப வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கீழப்பாவூர் நரசிம்மர் கோவில்
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கீழப்பாவூர் கிராமத்தில் நரசிம்மர் திருக்கோயில் உள்ளது. வயல்வெளிகள் நிறைந்த பசுமையான சூழலில் கோயில் அமைந்துள்ளது. இது சுமார் 1100 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது. இந்த இடம் சோழர்கள் காலத்தில் 'சத்திரிய சிகாமணி' என்று அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
நரசிம்மர் அவதாரம்
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் இறைவன் என்பதை உணர்த்தும் வகையில் தூணில் இருந்து நரசிம்மராக வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்த திருத்தலம்தான் அகோபிலம். இரண்டு நாழிகை மட்டுமே இந்த அவதாரம் நிகழ்ந்தது. காச்யப முனிவர், நாரதர், வருணன், சுகோசன் ஆகியோர் நரசிம்மரின் திருக்கோலத்தை தரிசிக்க விரும்பினர். அவர்கள் மகா விஷ்ணுவை பிரார்த்தித்தனர்.
16 கரங்களுடன் நரசிம்மர்
அவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கிய மகா விஷ்ணு பொதிகை மலைச்சாரலில் அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்ட மனிமுத்தா தீர்த்தத்தில் நீராடி, பின் 40 கல் தொலைவில் உள்ள சித்ரா நதிக்கரையில் என்னை நோக்கித் தவம் இருங்கள் என்று சொல்லி மறைந்தார். அதன்படியே தவம் இருக்க, தவத்தில் மகிழ்ந்த பகவான் ஶ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத நரசிம்மராக 16 திருக்கரங்களுடன் காட்சி கொடுத்தார். இதனால் கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம் தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படுகிறது.
உக்கிரம் தணித்த தீர்த்தம்
கருவறையில் நரசிம்மர் உக்கிரமாக இருப்பதால், ஊர் அடிக்கடி தீப்பற்றி எரிந்தது. நரசிம்மரின் சீற்றத்தைத் தணிக்க லட்சுமி தேவியை அனுப்பி வைத்தார், பிரம்மதேவன். நரசிம்மரின் சீற்றம் தணிந்தது. நாம் இங்கு சென்று பகவானை தரிசிக்கும் போது, நரசிம்மரின் மார்பில் வீற்றிருக்கும் லட்சுமிதேவியையும் தரிசிக்க முடியும். ஆலயத்துக்கு முன்பாக நரசிம்ம தீர்த்தமும் நரசிம்மப் பெருமானின் உக்கிரத்தை தணிக்கிறது.
எதிரிகளை வெல்லலாம்
மூலவரான நரசிம்மர் உக்கிரத்துடன் 16 கரங்களுடன் இரண்யனை வதம் செய்த நிலையில் காட்சியளிக்கிறார். இந்தக் கோயிலில் உள்ள லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. நீண்ட கால வழக்குகளில் இருந்து விடுபடவும் எதிரிகளை எளிதில் வெல்லவும் நரசிம்மர் அருள் பாலிப்பார் என்பது ஐதீகம்.
லட்சுமி நரசிம்மர்
ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலுக்கு அண்மைக் காலமாக அரசியல்வாதிகள் அதிகமாக வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அரசியல்வாதிகள் அதிகம் சென்று வழிபட்டு வரும் இந்தக் கோயிலின் சக்தியால் வெற்றி பெற்று முக்கியப் பதவிகளை அடைந்த பலர், மீண்டும் இங்கே வந்து வழிபடுகிறார்கள்.
வழக்குகளில் சாதகமான தீர்ப்பு
நரசிம்மரை தரிசித்தால் ஏற்படும் நன்மைகள். திருமணத்தடைகள் நீங்கும், கடன் தொல்லைகளுக்குத் தீர்வு கிட்டும். நீண்ட நாள் நோய்கள் சரியாகும். பலநாட்களாக நடந்துவரும் நீதிமன்ற வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நரசிம்மருக்கு இளநீர், பால், பானகம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். நெய்தீபம் ஏற்றி வழிபட பிரார்த்தனைகள் உடனே நிறைவேறும்.
முதல்வர் விக்னேஷ்வரன்
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகத்துக்கு வந்த இலங்கை வடக்கு மாகாண முதல்வரான விக்னேஸ்வரன் நேற்று நரசிம்மர் கோயிலுக்கு சென்றார். அவரை கோயிலின் அர்ச்சகர் ஆனந்தன் வரவேற்றார். கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் விக்னேஸ்வரன் பங்கேற்றார். கோயில் சிறப்புகளை அர்ச்சகர் விளக்கிய பின்னர் பிராகாரத்தில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார் விக்னேஷ்வரன்.
விக்னங்களை தீர்க்கும் நரசிம்மர்
விக்னேஷ்வரன் வடக்கு மாகாண முதல்வராக நீடிப்பதில் கடந்த சில ஆண்டுகளாகவே சிக்கல்கள் உள்ளன. கடந்த ஆண்டு அவரது அரசுக்கு எதிராக எதிர்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பின்னர் திரும்ப பெறப்பட்டது. விக்னேஷ்வரன் இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராக அவர் இருந்தபோதிலும் அவருக்கு உரிய அதிகாரம் இல்லை.
நரசிம்மரை சரணடைந்த விக்னேஷ்வரன்
இலங்கை அரசால் வடக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு பிரச்னைகள் இருக்கின்றன. அரசியல் சிக்கல்களில் இருந்து விடுபடவும் வடக்கு மாகாணத்தில் பிரச்சினைகள் தீரவும், கீழப்பாவூர் லட்சுமி நரசிம்மர் ஆலயத்துக்குச் சென்று வழிபடலாம் என்று சிலர் கூறியதன் அடிப்படையிலே குற்றாலம் வந்த விக்னேஷ்வரன், கீழப்பாவூர் நரசிம்மரை வழிபட்டுள்ளார். இங்கு வழிபாடு நடத்திய பின்னர் மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றார்.