சென்னையில் இன்று மாலையும் கனமழை வெளுக்குமாம்.. நார்வே வானிலை மையம் எச்சரிக்கை
சென்னையில் இன்று மாலையும் கனமழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: இன்று மாலையும் சென்னையில் கனமழை கொட்டித் தீர்க்கும் என நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை ஊற்றியது. இதனால் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
பல பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தாழ்வானப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
மின்சாரம் துண்டிப்பு
சென்னையில் உள்ள பெரும்பாலான சுரங்கப் பாதைகள் நிரம்பியுள்ளதால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் அவதி
நேற்று மாலை முதலே மழை பெய்ததால் அலுவலகம் சென்றவர்கள் நள்ளிரவு வரை வீடு திரும்ப முடியாமல் அவதியடைந்தனர். சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் பேருந்துகள் மிக குறைந்தளவே இயக்கப்பட்டன.
நடந்தே சென்ற மக்கள்
வாடகைக்கார்கள் மற்றும் ஆட்டோக்களின் சேவையும் முடங்கியது. இதனால் மக்கள் நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டது.
நார்வே மையம் எச்சரிக்கை
இந்நிலையில் சென்னையில் நேற்று போல் இன்று மாலையும் மழை வெளுக்கும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்குப்பிறகு மழை தொடங்கும் என்றும் நார்வே நாட்டு வாலை மையம் தெரிவித்துள்ளது.
இரவு முழுவதும் நீடிக்கும்
மாலை 6 மணியில் இருந்து விடிய விடிய மழை நீடிக்கும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது. பகல் நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை நீடிக்கும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது.
நேற்று பலித்த கணிப்பு
நேற்று மாலையும் சென்னையில் பலத்த மழை பெய்யும் என்று நார்வே வானிலை மையம் கணித்திருந்தது. அதுப்போலவே நேற்று விடிய விடிய சென்னையில் மழை ஊற்றியது.
அப்போதும் சரியாக இருந்தது
கடந்த 2015ஆம் ஆண்டும் நார்வே வானிலை மையம் கணித்தது போலவே சென்னையில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. தற்போது மீண்டும் சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் எச்சரித்துள்ளது.