பைக் பதிவு செய்ய லஞ்சம் கேட்ட ஆர்டிஓவை அசிங்கப்படுத்திய திருப்பூர் நாகராஜ்
திருப்பூரில் வாகனத்தை பதிவு செய்ய லஞ்சம் கேட்டதால் பாதிக்கப்பட்டவர் வாகனத்தை ஆர்டிஓவிடமே ஒப்படைத்துவிட்டு சென்றார்.
திருப்பூர் : இரு சக்கர வாகனத்தை பதிவு செய்ய லஞ்சம் கேட்டதால் அந்த வாகனத்தை ஆர்டிஒவிடம் கொடுத்து அசிங்கப்படுத்தினார் வாகன உரிமையாளர்.
திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் சுயதொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட வாகன விற்பனையகத்தில், கடந்த 30ஆம் தேதி இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார்.
வாகனப் பதிவிற்கு லஞ்சம்
அந்த வாகனத்தை டீலர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை. அந்த வாகனத்தை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு லஞ்சம் தரவேண்டும் என கூறிய கடை ஊழியர்கள், கூடுதலாக பணம் தரும்படி நாகராஜனை நிர்பந்தித்துள்ளனர்.
நடவடிக்கை இல்லை
இதற்கு நாகராஜ் சம்மதம் தெரிவிக்காததால் கடந்த ஒரு மாதமாக வாகனம் நம்பர் போர்டு இல்லாத காரணத்தால் பயன்படுத்த முடியாமலே இருந்து வந்துள்ளது. திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதனிடம் நாகராஜ் புகார் அளித்துள்ளார் ஆனால் ஒரு மாதமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆர்டிஓவிடம் ஒப்படைப்பு
இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் தனது வாகனத்தில் நம்பர் பிளேட் இருக்கும் இடத்தில் ஆர்டிஓவிற்கு லஞ்சம் தர பணம் இல்லாததால் வாகனத்தை அவரிடமே அளிப்பதாக போர்டு மாட்டினார். மேலும் வாகனத்தை ஆர்டிஓ அலுவலகத்திலும் ஒப்படைப்பதற்காக கொண்டு சென்றார்.
பரபரப்பு
அதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகக் கோரி நாகராஜூக்கும், வாகன விற்பனையகத்திற்கும் சம்மன் அளித்துள்ளனர். இச்சம்பவத்தால் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.