வெடிக்காத வெடிமருந்துகள் வெடிக்கலாம்… இடிக்கப்பட்ட 11 மாடி கட்டடத்தை வேடிக்கை பார்க்க அனுமதி இல்லை
இடிக்கப்பட்ட 11 மாடி கட்டடத்தை வேடிக்கப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
சென்னை: நொடிப் பொழுதில் தரைமட்டமாக்கப்பட்ட 11 மாடிக் கட்டடத்தை அருகில் சென்று வேடிக்கைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
இடியும் நிலையில் இருந்த மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டடம் நேற்று மாலை நொடிப் பொழுதில் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அசம்பாவிதம் நடக்கும் ஆபத்து இருப்பது தெரிந்தும் கூட ஆயிரக்கணக்கான மக்கள் 11 மாடிக் கட்டடம் சீட்டுக்கட்டுப் போல் சரிவதை பார்க்க அந்தப் பகுதியில் கூடி இருந்தனர்.
அந்த ஆர்வம் சற்றும் குறையாமல், தரைமட்டமாக்கப்பட்ட இடத்தை பார்ப்பதற்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். ஆனால், காவல் துறை அதற்கு அனுமதி மறுத்துள்ளது.
2 லாரிகளில் கொண்டு வரப்பட்ட வெடிமருந்துகள் 11 மாடிக்கட்டடத்தில் வைக்கப்பட்டு பின்னர், ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க வைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. வைக்கப்பட்ட வெடிமருந்துகள் முழுவதும் வெடிக்காமல் ஒரு சில இடங்களில் அப்படியே இருக்க வாய்ப்பு இருப்பதால் பொது மக்கள் அங்கு சென்று பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
சின்ன அசம்பாவிதமும் இல்லாமல் கட்டடம் இடித்து தகர்க்கப்பட்ட பின்னர், வேறு எதுவும் பிரச்சனை வரக் கூடாது என்பதற்காகவும் போலீசார் பொதுமக்களை அந்த இடத்தில் வேடிக்கை பார்க்க அனுமதிக்காமல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு மவுலிவாக்கத்தில் 11 அடுக்கு கொண்ட 2 கட்டடங்கள் கட்டப்பட்டன. 2014ம் ஆண்டு திடீரென 2 கட்டடங்களில் ஒன்று பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் 61 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்தனர். மேலும 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, இடிந்த கட்டடத்தின் அருகில் கட்டப்பட்ட இன்னொரு 11 மாடிக் கட்டடத்தை இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து, இந்த கட்டடம் நேற்று மாலை 6.52 மணியளவில் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.