வெயில் கொஞ்சம் அதிகமா இருக்குல்ல.. அதான் அப்படி பேசறார் - எச்.ராஜாவை கிண்டலடித்த ஓ எஸ் மணியன்
திராவிடக் கட்சிகள் குறித்த எச்.ராஜாவின் பேச்சுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கிண்டலாக பதிலளித்துள்ளார்.
Recommended Video
புதுக்கோட்டை : திராவிடக்கட்சிகள் குறித்து பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து அவதூறாக பேசி வருவது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஓ.எஸ். மணியன், வெயில் காரணமாக ராஜா அப்படி பேசிவருகிறார் என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
புதுக்கோட்டையில் நேற்று நடந்த விழா ஒன்றில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டார். அப்போது அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவரிடம் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும். அதை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது . எனவே, மத்திய அரசு அதை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து இதுவரை 4 மாநில அரசுகளும் எந்த ஒரு வரைவுத் திட்டத்தையும் மத்திய அரசுக்கு வழங்கவில்லை. இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக தேசியச் செயலாளர் தொடர்ந்து திராவிடக் கட்சிகள் மீது அவதூறு பரப்பி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், எச்.ராஜா பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். வெயிலில் தாக்கம் அதிகமாக இருப்பதால் அவர் அப்படி பேசி வருகிறார் என்று கிண்டலாக பதிலளித்தார்.