ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தால் அனைவருக்கும் கிடைத்த வெற்றி: பொன்.ராதகிருஷ்ணன்
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கிடைத்தால் அது அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்று மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவரான அழகுமுத்துக்கோன் சரித்திரத்தை போற்றும் வகையில் அஞ்சல் தலை வெளியீடு விழா இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவ், பொன்.ராதகிருஷ்ணன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருகிற 2016-ம் ஆண்டு பொங்கல் விழாவை அனைவரும் ஜல்லிக்கட்டு விழாவாக கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவரும் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு ஜல்லிக்கட்டு நடத்த முழு முயற்சிகள் எடுத்து வருவதாக கூறியதையடுத்து அவர்கள் நடத்த இருந்த போராட்டம் கைவிடப்பட்டது. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ஜ.க. மேல் வைத்துள்ள நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது. ஜல்லிக்கட்டுக்காக முழு முயற்சி எடுத்து வரும் நிலையில் இளைஞர்கள் யாரும் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்த வேண்டாம். ஜல்லிக்கட்டு சிக்கல் ஏற்பட்டது பா.ஜ.க. ஆட்சியில் அல்ல. இன்று போராடி கொண்டிருப்பவர்கள் அன்றே போராடி இருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தால் அது எனக்கு மட்டும் கிடைத்தது இல்லை அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்று அவர் கூறினார்.