ஆபாச காட்சிகளை தணிக்கை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்றம்
சென்னை: தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தணிக்கை செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜி.அலெக்ஸ் பென்சீகர், ஏ.ஆரோக்கியதாஸ் உள்பட 4 பேர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தனியார் தொலைக் காட்சிகளில் ஆபாசமான நடனங்கள், தரக்குறைவான, வன்முறை அதிகம் நிறைந்த காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. குறிப்பாக பெண்கள், குழந்தைகளை பாதிக்கும் விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி, தணிக்கை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் முன் தணிக்கை செய்யப்படுவதில்லை. ஆனாலும், கேபிள் டிவி நெட்வொர்க் சட்டம் 1995-ன் படி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது கண்காணிக்கப்படுகிறது.
இதன் படி விதிமுறைகள் மீறப்பட்டால், தானாகவோ அல்லது புகார் ஏதேனும் வந்தால், அதன் அடிப்படையிலோ இந்த சட்டப் பிரிவுகளின்படி தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கிறது.
திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, சினிமா சட்டம் 1952-ன் சில வழிமுறைகளை அரசு வெளியிட்டது. இதே போன்று, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்காணிப்பதற்கு எலக்ட்ரானிக் மீடியா கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
பொதுவாக சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விரும்பத்தகாத பிரச்சினைகளை உருவாக்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்த போதிலும், இது தகவல் தொழில்நுட்ப காலம். இதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது. இந்த அனைத்து விஷயங்களும் சமூக பிரச்சினைகளுடன் தொடர்புடையது. இது தொடர்பாக சட்டங்கள் தேவையா? இல்லையா? என்பது அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான் முடிவு செய்யவேண்டும். எனவே, மனுதாரர்களின் கோரிக்கையின் அடிப்படையில் எந்தவொரு உத்தரவையும் எங்களால் பிறப்பிக்க முடியாது. மனுவை முடித்துவைக்கிறோம்," என்று கூறப்பட்டுள்ளது.