கி.வீரமணி அறிக்கைக்கு பதில் கூற விரும்பவில்லை - ஸ்டாலின்
சட்டசபையில் நடந்த சம்பவம் பற்றி கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதில் கூற விரும்பவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், பிப்ரவரி 22ஆம் தேதியன்று திருச்சியில் நடைபெற உள்ள உண்ணாவிரதத்தில் பங்கேற்க உள்ளதாக கூறினார். சட்டசபையில் நடந்த சம்பவம் பற்றி தி.க. தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று நடந்த சம்பவம் பற்றி அறிக்கை வெளியிட்டிருந்த வீரமணி, சட்டசபையில் நடந்த அமளிகள் வரலாற்றில் தீராத கறையை ஏற்படுத்தி விட்டன. எந்த அணிக்கும் ஆதரவில்லை என்று தொடக்கத்தில் கூறப்பட்ட நிலையோடு திமுக நின்றிருந்தால் இவ்வளவு மனவேதனையும், வெட்கப்படத்தக்க, திமுகவின் அரசியல் வரலாற்றில் களங்கம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டிருக்காது.
பேரவைத்தலைவர் நாற்காலியில் அமர்வது, இருக்கையை உடைப்பது, அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு முற்றிலும் உரியதாக இல்லை. வெட்கமும், வேதனையும்பட வேண்டிய தலை குனிவான நிலையும் கூட. இந்தக் கட்டத்தில் கருணாநிதி சபையில் இருந்து வழி நடத்த இல்லாததால் ஏற்பட்ட நிலைமை இது என்று வீரமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து மு.க.ஸ்டாலினிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு ஸ்டாலின், தான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் நீங்கள் கி. வீரமணியிடமே கேளுங்கள் என்று தெரிவித்தார்.