நெல்லித்தோப்பில் நாம் தமிழர் வேட்பாளரை வீழ்த்தி 3-வது இடத்தை கைப்பற்றிய நோட்டா!
நெல்லித்தோப்பில் நோட்டாவுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.
புதுச்சேரி: புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அபார வெற்றி முதல்வர் பதவியை தக்க வைத்து நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார் நாராயணசாமி. அவர் போட்டியிட்ட தொகுதியில் அதிமுகவை தவிர்த்து பிரதான கட்சிகள் போட்டியிடாத நிலையில் 3-வது இடத்தை நோட்டா கைப்பற்றியுள்ளது.
புதுவை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நமச்சிவாயம் முதல்வராகக் கூடும் என கூறப்பட்டது.
பதற்றத்தில் நாசா
ஆனால் டெல்லி லாபிகளை பயன்படுத்தி எப்படியோ முதல்வர் பதவியைக் கைப்பற்றிவிட்டார் நாராயணசாமி. ஆனாலும் நெருப்பு மீது அமர்ந்த கதைதான் நாராயணசாமிக்கு.. 6 மாதத்துக்குள் இடைத்தேர்தலை சந்தித்து ஜெயித்தாக வேண்டும் என்பதுதான் அவரது பதற்றம்...
கெட்டியாக பிடித்தார்...
தற்போது நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வர் பதவியை கெட்டியாக பிடித்துக் கொண்டுவிட்டார் நாராயணசாமி. நாராயணசாமிக்கு மக்கள் நலக் கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாஜக ஆதரவு தந்தன. நெல்லித்தோப்பில் காங்கிரஸ், அதிமுக தவிர பிரதான கட்சிகள் போட்டியிடவில்லை.
நோட்டாவுக்கு 3-வது
நாம் தமிழர் கட்சியின் ரவி அண்ணாமலை தனித்து இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். தற்போது 3-வது இடத்தை யாருக்கும் வாக்கு இல்லை என்கிற நோட்டா பெற்றுள்ளது. நோட்டாவுக்கு மொத்தம் 334 பேர் வாக்களித்துள்ளனர்.
90 வாக்குகளுடன் 4-வது இடம்
4-வது இடம் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ளது. அக்கட்சி வேட்பாளருக்கு 90 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. 2022-ல் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என பேசி வரும் நாம் தமிழர் கட்சிக்கு புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில் வெறும் 90 வாக்குகள் மட்டுமே கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.