மக்கள் விரோத பட்ஜெட்.. ஆர்.கே. நகரில் வாக்காளர்கள் பதில் தருவார்கள்… கே.ஆர். ராமசாமி தாக்கு
சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மக்கள் விரோதமானது என்று சட்டசபையின் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர். ராமசாமி குற்றம்சாட்டினார்.
சென்னை: 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று சட்டசபையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மக்கள் விரோத பட்ஜெட் என்று காங்கிரஸ் தலைவர் கே. ஆர். ராமசாமி குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து சட்டசபை வளாகத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி கூறியதாவது:
தமிழகத்தின் நிதிநிலை மிக மிக மோசமான நிலையிலேயே இருக்கிறது. அதிமுகவினரே இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஏறத்தாழ மூன்றரை லட்சம் கோடி தமிழக அரசுக்கு கடன் இருப்பதாக அதிமுகவினர் கூறியிருக்கிறார்கள்.
2 லட்சம் கோடி கடன்
இதுதவிர 2 லட்சம் கோடி பொதுத்துறை கடனாக இருக்கிறது. கடன் என்றால் அதற்கு வட்டியை செலுத்த வேண்டியது அவசியம். வருமானத்தை விட வட்டி செலுத்த வேண்டியது அதிகமாக இருப்பதால் இன்று இந்த அரசால் செயல்பட முடியாமல் இருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம். தமிழகத்திற்கு கடுமையான நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு
இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஒன்றுமில்லை. தொழிலாளர்களுக்கு ஒன்றுமில்லை. மாணவர்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடையாது. அதே போல சட்டம் ஒழுங்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தனை இடத்திலும் சட்ட மீறல்கள் இருக்கின்றன. இதற்கு இந்த அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆர்.கே. நகரில் முடிவு
அரசின் இந்த செயலற்றதனத்திற்கு முடிவு கட்ட வேண்டியது மக்கள் தானே ஒழிய சட்டமன்றத்திற்குள் பேசி ஒரு நல்ல முடிவை எட்டிவிடலாம் என்று நாங்கள் நம்பவில்லை. முதல்கட்டமாக ஆர்.கே. நகரிலே நல்ல தீர்ப்பை மக்கள் தருவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
நம்பிக்கை இல்லாத் தீர்மானம்
24ம் தேதி வரை சட்டசபை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் சபாநாயகர் மீது திமுகவினர் கொடுத்திருக்கின்ற நம்பிக்கை இல்லாத தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகின்றோம் என்று கே.ஆர். ராமசாமி கூறினார்.